Wednesday 20 June 2012

 சிறுகதை:                                "  காலத்தின் கண்ணாடி...! "
                                                                                                               
" காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்.." அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும் ... ராஜா வெட்ஸ் ராகவி என்ற எழுத்துக்கள் மின்னியது. 'ராஜா' என்ற பெயரை பார்த்ததும் தான் காதலித்த ராஜாவை கல்லூரியின் கடைசி நாளன்று சந்தித்து பேசியது காயத்திரிக்கு நினைவலைகளாக இழுத்து கொண்டு வந்தது.
" இப்படியே.. அஞ்சு நிமிஷமா என் முகத்தையே பார்த்திட்டிருந்தா... என்ன அர்த்தம்...ஏதாவது பேசுங்க...."
" அதில்ல.... ரொம்ப நேரம் உத்து பார்த்தா குதிரை கூட கழுதை மாதிரி தெரியும்பாங்க...அதான்... நீ எப்படி தெரியறேன்னு பார்த்திட்டிருக்கேன்...."
" எப்படி இருக்கேனாம்...?"
" குட்டி பிசாசு மாதிரி தெரியற...காயத்ரி எதுக்கும் உன் காலை காட்டு.. நீதானான்னு.. செக்பண்ணிக்கறேன்..."
" உங்களுக்கு எப்பவும் குறும்பு விளையாட்டுதானா...? இனிமே நாம சந்திக்கற வாய்ப்பே கிடையாது.. என் வீட்டுக்கு தெரியாம அடிக்கடி போனில் கூட பேச முடியாது... மனசுக்குள்ள பயமாயிருக்கு..." அவள் கண்களில் கோர்த்த நீரை மெதுவாய் துடைத்துவிட்டு.. கை விரல்களை பற்றிக்கொண்டவன்,
" காயத்ரி எனக்கு மட்டும் அந்த கவலை இருக்காதா என்ன...? இங்கேயே இருந்தாலாவது...நீ எங்காவது வெளியில் வரும்போதாவது பார்ப்பேன்... ரூமை காலி பண்ணியாச்சி..நான் ஊருக்கு போய்த்தான் ஆகனும். நல்ல வேலை தேடிக்கிட்டு.. என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டா... நம்ம கல்யாணத்துக்கு எந்த தடையும்இல்ல... அதுக்காக நீ ரெண்டு வருஷமாவது காத்துதான் ஆகனும்..."
" நீங்க முறைப்படி வந்து பொண்ணு கேட்கறவரைக்கும் என் காதலை வெளியில் சொல்லமுடியாம மனசுக்குள்ள பூட்டி வச்சிதான் அழ முடியும்...."
" எனக்கு தெரியும் காயத்ரி.. காதல் என்ற வார்த்தையை கூட பேச பயப்படற கண்டிப்பு..கட்டுபாடான குடும்பத்தில் தான் நீ இருக்கே.. என்னை பிடிச்சிருந்தாலும் என் காதலை ஏத்துக்க ரொம்ப தயங்கினே..பயந்தே.. என்னை புரிஞ்சிகிட்டப்பிறகுதான் மனம் திறந்துபேசவே ஆரம்பிச்சே... உன் ஞாபகம் வந்தா பார்த்துக்க உன் போட்டோ இருக்கு எங்கிட்ட..ஆனா என் அடையாளமா எதையும் உன்னால வைச்சிக்க முடியாது... என் மனசை தவிர..இங்க பாரேன்.. உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்..இதை நீ தினமும் நெத்தியில வைச்சுக்கும்போதெல்லாம்... கண்ணாடியில நான் தெரிவேன்......" விதவிதமாய் ஸ்டிக்கர் பொட்டுக்களை தந்தான்.அவன் குழந்தைத்தனம் அவளுக்கு சிரிப்பை தந்தது. பொறுமையா.. நல்லவனா இந்தகாலத்தில இப்படியும் ஒருவன் ஆண்களில் இருப்பானா... அவன் தோற்றம் அவனுக்கு எப்போதுமே கர்வத்தை தந்ததில்லை.. சினிமா கதாநாயகன் போல் பெர்சனாலிட்டி.. அவன் பார்வை தன் மீது படாதா என்று காயத்ரியின் தோழிகள் எக்ஸ்ட்ராவாய் மேக்கப் செய்து கொண்டு அவனிடம் வளைய வந்து பேசுவார்கள். இயல்பாய் .. ஆரவாரமற்ற காயத்ரிதான் அவன் மனதுக்குள் நுழைந்தாள்.
"காயத்ரி எதற்கெடுத்தாலும் கோபப்படற எங்கப்பா... சொத்துக்காக சண்டை போடறஎங்கண்ணன்கள்... இவங்க நடுவில எங்கம்மா பாவம் தெரியுமா...? என் தங்கச்சிகளுக்கு நாந்தான் நல்லது செய்வேன்னு நம்பிக்கை வச்சிருக்காங்க...என் அம்மா எனக்கு தெய்வம் மாதிரி .... உன்னை பார்க்கிறப்ப.. எனக்கு அம்மாவோட பொறுமை.. பாசம் அப்படியே இருக்கு.. என்பான்.
" காயத்ரி... வீணா கவலைப்படாதே... இரண்டு வருசஷம்கிறது ஈசியா ஓடிடும்.. அதுவரை நீ வேற ஏதாவது கிளாஸ்க்கு போ.. இல்லை வேலைக்கு ட்ரை பண்ணு..." ... துறு..துறுன்னுஅழகா இருக்கிற இந்த கண்ணுல எப்பவும் கண்ணீர் வரக்கூடாது... சிரிச்சிகிட்டே அனுப்பு அப்பதான் என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியும்...."
மூன்று மாதம் ஓடியது.... அதுவரை அவ்வப்போது போன் செய்து பேசியவன்...பிறகு தகவலே இல்லை... இவளாக போன் செய்தாலும் போன் போகவில்லை... என்னபிரச்சினையோ... கடவுளிடம்தான் மனம் விட்டு பேசி அழ முடிந்தது. வீட்டில் கல்யாண பேச்சை தட்டி விட்டு சமாளிப்பதே பெரிய பாடாய் இருந்தது. விளையாட்டு போல் நான்கு வருடம் ஓடிவிட்டது.இனியும் உன் விருப்பபடி விட முடியாது என்று.. அப்பாவரன் தேடுவதில் மும்முரமானார். அம்மா இவளிடம்.." காயத்ரி.. சொந்தக்காரா எல்லாம் பெண்ணுக்கு வயசாயிட்டே போறது... இப்படியே வச்சிட்டுருக்காங்களேன்னு... ஏளனமா பேசறா... கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு என்னதான் காரணம்.. எவனையாவது மனசுல வச்சிட்டுருக்கியா... அப்படி ஏதாவது இருந்தா எங்களை நீ உயிரோடவே பார்க்க முடியாது. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ராங்க... பெற்றவங்க நல்லதுதான்  செய்வாங்க .. நல்ல முடிவா எடு..."
காயத்ரிக்குள் ... பெரிய போராட்டமே நடந்தது.... எந்த நம்பிக்கையில் ராஜாவுக்காககாத்திருக்க முடியும்....? ஒரு பெண் அவள் நிலமை எப்படி இருக்கும் என்று கூட புரிந்து கொள்ளாமல்... நான்கு வருடமாய் எந்த தகவலும் இல்லாமல்... அவன் மேல் நம்பிக்கை..குறைந்தது. ஒரு குடும்பம் வாழ தன்னை சாகடித்து கொள்ள துணிந்தாள்.. திருமணமுடிவை அப்பாவிடமே விட்டு விட்டாள்.ஒரு முகூர்த்த நாளில் மகேஷிற்கு மனைவியானாள். மகேஷ் குணத்தை தங்க தராசில் வைக்கலாம். அப்பா .. அம்மா நாங்கள் செய்த புண்ணியம் இத்தனை நல்ல கணவன் என்றார்கள். தன் மனதுக்குள் நினைத்த அந்த முதல் காதலை அவனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது.. அதற்கான சந்தர்ப்பம் திருமணமான பத்தாவது நாளே அமைந்தது. எல்லாம் முடிந்த பிறகு இவளை தேடி வந்திருக்கிறான் ராஜா...காயத்ரிக்கு திருமணமாகிவிட்டதை கேள்விப்பட்டு மனம் ஒடிந்து துடித்திருக்கிறான்..
அவன் அம்மாவின் இறப்பு.. குடும்ப பிரச்சினைகள் எல்லாம் முடிந்து அவளுக்காக தேக்கிவைத்திருந்த கனவுகளோடு வந்திருக்கிறான்.
"காயத்ரி .. காலம் கடந்தது என் தப்புதான்.. உன் வாழ்க்கையில் குறுக்கிட எனக்கு எந்தஉரிமையும் இல்லை...கடைசியா உன்னை ஒரு தரம் பார்த்துட்டு போக அனுமதிப்பியா.. ."
மகேஷிடம் அத்தனையும் கொட்டிவிட்டாள்... " இதை நீ முதல்லயே சொல்லி இருந்தா உன்விருப்பத்துக்கு குறுக்கே வந்திருக்கமாட்டேன் இல்ல... படிச்சிருக்கே உன் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க என்ன தயக்கம்.. இதை சாக்கா வச்சி உன்னை சந்தேக பட மாட்டேன்.
வீட்டில் இருக்கறவங்களுக்கு என் நண்பர்னு சொல்லிக்கிறேன்... நம்ம வீட்டுக்கு ஒரு நாள் நானே அழைக்கிறேன்..."
ராஜா வந்தானே தவிர... காயத்ரியை ஏறெடுத்து பார்க்கவே முடியாமல் தலை தாழ்ந்தான்."சார்.. காயத்ரி ரொம்ப நல்லவ.. நாங்க பழகின நாட்கள் களங்கமில்லாதது. நல்லபடியா பார்த்துக்கங்க... "
"ராஜா காலத்தால் ஆறாத காயம் எதுவும் கிடையாது .  நீங்க சிக்கீரமே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கணும்... நீங்க சந்தோஷமா வாழ்க்கையை  அமைச்சுக்கிறதுதான் காயத்ரிக்கு நீங்க தருகிற பரிசு.. " காயத்ரியை சமைக்க சொல்லி அவனுக்கு சாப்பிட உபசரித்தான்.  எந்த  கணவனும் மனைவியை காதலித்தவனை வரவேற்று உபசரித்து அனுப்பி இருக்க மாட்டான். மகேஷ் அவள் மனதில் மிகவும் உயர்ந்தான்.
 ராஜா மௌனமாய் சிரித்து விடைபெற்றான் .
இதோ பத்து வருடங்கள் ஓடிவிட்டது . மகேஷ் சொன்னது சரிதான் . காலம் காயத்திற்கு மருந்து போட்டு ஆற்றி விட்டது  . அவளுடைய காதல் எதோ இளமை கால  கனவு போல.. வர்ணம் கலைந்த ஓவியம் போல் ..  முழுமையாக ராஜாவின் தோற்றம் கூட நினைவில் கொண்டு வர முடியவில்லை ..  எப்போதாவது அவன் ஞாபகம் வரும்போது அவர்களின் பேச்சுக்கள் மட்டும் வார்த்தைகள் மடியாமல் காதுக்குள் உணர முடியும்போது
மனசு லேசாய் வலிக்கும்.  அவன் எங்கு இருக்கிறான் என்பதே தெரியாது .. அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமாகஇருக்கவேண்டும் ..கடவுளே என்று  மனதுக்குள் வேண்டுதலாய் ஒலிக்கும். 
                                                                    
( ஜூன் 22-28  பாக்யா இதழில் வெளி வந்தது)

Sunday 17 June 2012


கவிதை

லஞ்சவாதி
 தன் இலையில்
பரிமாறியிருக்க
பக்கத்து இலையில்
கை வைக்கும்
எச்சில்காரர்கள்...!
(பாக்யா வில் வெளி வந்தது )

இப்படித்தான் சமாளித்தேன்


இப்படித்தான் சமாளித்தேன்


என் மகள் அஸ்வினிக்கு நடிகை ஜோதிகாவை ரொம்ப பிடிக்கும்.
அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு
நாள் திடீரென்று , "ஜோதிகா ஆண்ட்டி நம்ம வீட்டுக்கு வந்தாதான்
சாப்பிடுவேன் " .. என்று அடம் பிடித்தாள். எத்தனையோ விளையாட்டுக்
காட்டினாலும் சாப்பிடாமல் அழ ஆரம்பித்து விட்டாள். என்ன
செய்வதென்று யோசித்த நான் , " ஜோதிகா ஆண்ட்டிக்கு நிறைய
வேலை இருக்காம்.. உன் கூட போன்ல வேணும்னா பேசறாங்களாம்..."
என்று அவளிடம் சொல்லிவிட்டு, வெளியூரில் இருக்கும் தோழி
ஒருவருக்கு ஃபோன் செய்து என் குழந்தையிடம் ஜோதிகா மாதிரி பேச
சொன்னேன். தோழியும் குழந்தையிடம், " சமர்த்தா சாப்பிடு, நான்
லீவ்ல வர்றேன்..." என்று சமாதனப்படுத்த, ஜோதிகாதான் பேசினார்
என்று நம்பிய என் மகள் மகிழ்ச்சியாக சாப்பிட்டாள்.இப்போது அவள்
எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ஜோதிகாவுடன் போனில் பேசிய
கதையை அவளிடம் இப்போது சொன்னால் , வெட்கத்துடன் சிரிக்கிறாள்.

(ஜனவரி 1-15, 2012 தேவதை இதழில் வெளிவந்தது)

Friday 8 June 2012

சிறு கதை:
                                            அது ஒரு கனா காலம்
 
                                                                                                                         


" அம்மா... இந்த ஜாதகம் நம்ம ராஜேஷுக்கு பொருத்தமா இருக்கு.. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச
இடம்... ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. போட்டோவை பாரு பிடிச்சிருக்கா..." சௌம்யா அம்மாவிடம் தர,
" ம்.. பொண்ணு நல்லா லட்சணமாதான் இருக்கா...! போட்டோ அனுப்பி வைப்போம்.. அவன்
என்ன சொல்றான்னு பார்க்கலாம். பகவான்தான் அவனுக்கு புத்தியை கொடுத்து சம்மதிக்க
வைக்கனும்.எதாவது ஒரு குறை சொல்லிகிட்டு வேணாம்னு சொல்லிகிட்டே இருக்கான்..."
" என்னோமோப்பா.. இவனுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்
ஆயிடுவோம்.. சொந்தக்காரா எல்லாம் பையன் வெளி நாட்டுல நல்லா சம்பாதிக்கிறான்..
இன்னும் என்ன கொறைச்சல்.. காலா காலத்துல கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானேன்னு ....கேட்டுக்கிட்டே இருக்கா..." மாப்பிள்ளை கிரிதரிடம் அப்பா சொல்லி கொண்டிருந்த போதே .. போன் ஒலித்தது. ...' ராஜேஷ் தான் பண்ணுவான் ' என்று சொல்லிக்கொண்டே எடுத்தார்.
" ஹாய் டாடி ஹவ் ஆர் யு அண்ட் மம்மி.. பை தி பை... இந்த முறை கொஞ்சம் அதிகமா பணம்
போட்டிருக்கேன்.. மொத்த கடனையும் கிளியர் பண்ணிடுங்க.. நான் மம்மி கிட்ட அப்புறமா
பேசறேன்... வைச்சிடட்டா...
" இரு ராஜேஷ்.. நம்ம சௌமியும் இங்கதான் வந்திருக்கா.. ஏதோ பேசனும்னா..." சௌம்யாவிடம்
தந்தார்.
" ராஜி.. எப்படிடா இருக்கே... இத்தனை நாளா ரிஜக்ட் பண்ண மாதிரி இந்த முறை உன்னால நோ
சொல்ல முடியாது.. பி காஸ் மை செலக்க்ஷன் டா.. பொண்ணு ரஞ்சனி ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. அசல்
நம்ம ஊர் சினேகா மாதிரியே இருக்கா....."
" ஏய் சௌமி .. உன்ன என்ன பொண்ணு பார்க்க சொன்னேனா...? எப்ப பாரு கல்யாணம்..
கல்யாணம்னு..."
" வயசான காலத்துல அப்பா, அம்மாவோட விருப்பம் வேற என்னவாயிருக்கும்... உனக்கு ஒரு நல்ல
வாழ்க்கை அமைச்சு தர்றதுதானே இருக்கும்...?
" சௌம்யா... எப்ப இருந்தாலும் தெரிய போற மேட்டர்தான்.. நானே எப்படி சொல்றதுன்னு
இருந்தேன்.. அப்பாகிட்ட நீயே ஒபன் பண்ணி கன்வினியன்ஸ் பண்ணிடு.. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசமாயிடுச்சி.. என் கூட புராஜக்ட் பண்றா.. பேரு ப்ரூலீ. ."
சௌம்யா பதட்டத்தை காட்டி... " ஏய்.. ராஜி.. என்னோமோ ப்ரூ காபி குடிச்சேன்ற மாதிரி..
சாதாரணமா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றே...? காமெடி தானே பண்றே..."

" இதுல காமெடி பண்ண என்ன இருக்கு.. அவளுக்கும் நிறைய சம்பளம்.. என் லைப் நல்லாருக்கும்..
அவ சைனாக்காரி...அப்பா கிட்ட சொன்னா சம்மதிக்கமாட்டார்.. நாங்க ரெண்டு பேரும் காதலிச்சி
ரெஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம்...." ...நானே நாளைக்கு போன் பண்றேன்..." பதிலை
எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
சௌம்யா விவரம் சொன்னதும் அம்மா தளர்ந்து கீழே விழ போனவளை...கிரி தாங்கி பிடித்து தண்ணீர்
கொடுத்தான். அப்பா அதிர்ச்சியாய் உட்கார்ந்திருந்தார்.
மௌனத்தை கிரிதான் கலைத்தான்..." மாமா.. நாளைக்கு என்னன்னு விசாரிச்சு பார்க்கலாம்...
எதுக்கும் கவலை படாதீங்க.. எப்படியாவது ஸால்வ் பண்ணிடலாம்..."
அம்மா இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்... " ஈ கடிக்காம...
எறும்பு கடிக்காம பார்த்து பார்த்து வளர்த்தேனே ... இதுக்கா படிக்க வைச்சி அனுப்புனேன்... உன்
கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணனும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்..? விசேஷ நாள்ல
மருமக வாசல்ல கலர் கோலம் போடற அழகும் ... பட்சணம் செய்து பேரப்பசங்களோடு சந்தோஷமா
சாப்பிடற குடுப்பினையும் இதெல்லாம் கனவா போச்சே...."
" ஆமாம்மா இப்ப புலம்பி என்ன...? என்னை மட்டும் பொண்ணுன்னா இப்படி இருக்க கூடாதுன்னுஎல்லாத்துக்கும் ரூல்ஸ் போட்டே.. அவனை இஷ்டத்துக்கும் விட்டுட்டே...."
"ஏய்.. சௌமி ... எந்த நேரத்தில் எப்படி பேசனும்னு உனக்கு விவஸ்தை இல்ல... " கிரி திட்டியதும்
அமைதியானாள்.
பெண்கள் கவலையோ.. கோபமோ கொட்டி விடுவார்கள். அப்பா அமைதியாய் ஈஸிசேரில்
படுத்திருந்தார்... அவர் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது ராஜேஷ் பற்றி... தனியார்
கம்பெனியில் கிளார்க்காக சொற்ப வருமானத்தில்.. பிள்ளைகளை வளர்த்து.. சௌம்யாவிற்கு
கல்யாணம் செய்தது.. ராஜேஷை இன்ஜினியரிங் படிக்க வைத்தது எல்லாமே கடன் பட்டுதான்.
படிப்பை முடித்தவன் வெளி நாட்டு வேலைக்கு செல்வதாக ராஜேஷ் சொன்னதும் அப்பா
ஒத்துக்கொள்ளவில்லை.
"ராஜி.. அம்மாவால உன்னை பார்க்காம வருஷக்கணக்குல இருக்க முடியாது.. உன் திறமையை
இங்கியே காட்டு.. உன் அறிவை எங்கோ விற்க நான் சம்மதிக்க மாட்டேன்..."
" டாடி நீங்க ஏன் அப்படி நினைக்கிறிங்க... நம்ம அறிவை எல்லா தேசத்திலும் நிரூபிச்சு காட்டறது
நமக்கு பெருமைதானே.. சரி .. நான் என்ன அங்கேயேவா செட்டில் ஆயிட போறேன்... ஜஸ்ட்.. ஒரு
அஞ்சு வருஷம் சம்பாதிச்சிட்டு வந்துடறேன்.. நம்ம கடனை எல்லாம் அடைச்சிட்டு லைப்பை கொஞ்சம்
வசதி படுத்திக்கலாமே...." அம்மாவை கெஞ்சி சம்மதிக்க வைத்தான். அம்மா தன் வளையலை விற்று
வெளி நாடு போகும் செலவிற்கு தந்தாள்.

"அப்பா நாம செட்டில் ஆகிட்ட பிறகு நீங்க வேலைக்கு போக வேண்டாம்.. அம்மா உனக்கு வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வச்சிடுவேன்.. நீ ராணி மாதிரி உட்கார்ந்துகிட்டு அதிகாரம் பண்ணனும் என்ன..." கிளம்புவதற்கு முன் ஒரு பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மாவின் கையில் உருண்டை சாதம் வாங்கி சாப்பிட்டு கொண்டே சொன்னான். "
அம்மா உன் கையால வெறுமனே மிளகா கிள்ளி தாளிச்சா கூட நல்லா இருக்கு.. அப்படி ஒரு ராசி ..."
சின்ன வயதிலேயே ராஜேஷ் சுட்டியா இருப்பான். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு கேரியரை
பையில் போட்டதும்.. ஓடிப்போய் செருப்பை எடுத்து தந்து டாட்டா காண்பிப்பான்.அப்பாவின்
சுண்டு விரலை பிடித்து கொண்டுதான் எங்கும். பக்கத்து வீட்டு மாமா கேட்பார்.." அடேய் தம்பி ...
ஒரு சாக்லேட் தாரேன்.. உங்கப்பாவை எனக்கு குடுத்திடறியா..."
" ம்.. ஆசை.. தோசை... எது குடுத்தாலும் எங்கப்பாவை தரமாட்டேன்..."
இப்படி பட்டவனா என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டான்..? லட்சங்கள் லட்சியங்களை
புதைப்பதில் என்ன ஆச்சரியம். வளரும் வரை பிள்ளைகளோடு இருப்பது எல்லாம் வளர்ந்த பின் கனா காலங்கள் ஆகிவிடுகிறது .
மறு நாள் அவனே போன் செய்தான், அம்மாதான் முதலில் பேசினாள்..." ராஜி.. நடந்தது
எல்லாம் கெட்ட கனவா நினைச்சிகிட்டு அவளை அங்கேயே விட்டுட்டு இங்கேயே வந்துடுடா..
பேசிக்கொண்டிருந்தவளை.. " ஸ்ரீமதி நீ என்ன பேச்சு பேசறே..? எந்த நாடா இருந்தா என்ன ஒரு
பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிறது நம்ம பண்பாடு இல்ல..". குடு நான் பேசிக்கறேன்... அப்பா
பிடுங்கியதும்,
"அப்பா.. சௌமி சொல்லியிருப்பா.. ஸாரிப்பா நீங்க சொன்னா ஒத்துக்க போறதில்லைனுதான்
நானே பண்ணிகிட்டேன்.. " எனக்கு இந்த ஹைடெக் லைப் பழகிப்போச்சுப்பா.. ப்ரூலியோடு
இங்கயே செட்டில் ஆயிடலாம்தான்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்... மறுபடியும் அங்க வந்து முட்டு
சந்து.. கும்பல் வாழ்க்கை இதெல்லாம் .. நினைச்சு பார்க்கவே முடியலை.. நான் மாசா மாசம் பணம்
அனுப்பிடறேன்.. நல்ல வீடா கட்டிட்டு சௌகர்யமா இருங்க.. என் வொய்ப்பை நீங்க பார்க்கனும்
இல்லையா... அடுத்த மாசம் அவளை கூட்டிகிட்டு இண்டியா வர்றன்பா..."
ராஜேஷ் வந்ததும் உறவுகளுக்கு சொல்லி ஒரு ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்
ராமனுஜம்.
" இந்த அசிங்கத்தை ஊரை கூட்டி வேற சொல்லனுமாக்கும்.. " அம்மா கேட்டதும்,
" நம்ம பையனுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரிவிக்கனும் இல்லையா,,,?
ராஜேஷ் வருவதற்காக வீட்டை ஓடி ஓடி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.. ஸ்ரீமதி. ' என்ன
இருந்தாலும் வெளி நாட்டுல இருந்து வர்றான் இல்ல... என்றாள். ராஜேஷ் வரும் அன்றே ரிசப்ஷன்
ஏற்பாடு ஆயிருந்தது. நீள முகத்துடன் கூந்தலை விரித்து கொண்டு முக்கால் பேண்ட்டுடன் அவன்
கையை கோர்த்து கொண்டு வந்த அவளை பார்க்கவே பிடிக்கவில்லை சௌம்யாவிற்கு. யாரும்
எதுவும் விமர்சனம் செய்ய கூடாது என்று அப்பா அடக்கி வைத்திருந்தார்.
அம்மாவின் ஆசைக்காக காஞ்சி பட்டு சேலையை அவளுக்கு சுற்றி மேக்கப் செய்து ரிசப்ஷனில் நிற்கவைத்தார்கள். ராஜேஷ் மட்டும் அவளுக்கு தஸ்.. புஸ் என்று இங்கிலிஷ் பேசி அறிமுகபடுத்தி
கொண்டிருந்தான்.
ஆண்கள் பட்டாளம் அவளையே அதிசயமாய் பார்த்து கொண்டு.. வெளி நாட்டுக்காரிக்கு கை
கொடுத்தால் கூச்சபட மாட்டாள் என்று சாக்காக க்யூவில் நின்று கை தந்து கொண்டிருந்தார்கள்.
" மாமி.. இவ இட்லி, தோசை எல்லாம் திம்பாளா.. வீட்டுக்கு போனா ஸ்ரீமதி என்னத்தை ஆக்கி
போடுவா...? சிலர் வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பேருக்கு ஒரு ஜூசை குடித்துவிட்டு,..." டாடி இந்த
அட்மாஸ்பியர் இவளுக்கு சரிபடாது.. பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டிருக்கேன். "கிளம்பினார்கள்.
லீவு முடிந்து கிளம்பும் போது சொல்லி விட்டு போக வந்தார்கள். இது வரை மௌனம் காத்த
அப்பா,
" ராஜி.. இதுல நீ இது வரை அனுப்பின பணம் அப்படியே இருக்கு... ரிசப்ஷன் செலவு என் கடைசி
கடனாயிருக்கட்டும்.. நீ எவளையோ இழுத்துண்டு வந்தது கூட பரவாயில்லைடா... ஆனா.. முட்டு
சந்து.. கும்பல் வாழ்க்கைன்னு.. கேலியா பேசி உன்னை வளர்த்து விட்ட தாயையும் தாய் நாட்டையும்
பழிச்ச பாரு.. இங்க வலிக்குதுடா.. " நெஞ்சை தொட்டவர், "ராஜி .. அன்பும் பாசமும் தாண்டா
நம்ம வாழ்க்கை .. பகட்டுதான் வாழ்க்கைன்னு வாழற உன் பணம் எனக்கு வேணாம். நான் உன்னை
வளர்த்ததுக்கு கூலி மாதிரி கொடுக்கிற எதுவும் வேண்டாம். சந்தோஷமா போ ஆனா.. உன்
கடமைன்னு சொல்லிகிட்டு கடைசியா கூட வரவேணாம்.
" டாடி .. டோண்ட் செண்டிமேட்.. டைம் வில் சேஞ்சஸ் யு ....ஓ.கே ப்ரூ ஸே பை தெம்..."
அவள் சிரித்த படி கை அசைத்தாள். ஸ்ரீமதி கண்ணீர் விட அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் மொழி தேவைப்படவில்லை.
( 2012  ஜூன்  அய் -தமிழில் வந்தது )

Friday 1 June 2012




வெற்றி ....!


என்னால் எப்படி
இதெல்லாம் முடியும்.. தயங்கும்
தாழ்வு மனப்பான்மையை
விரட்டி..
என்னால் முடியாவிட்டால்
வேறு யாரால் முடியும்
என்று
தன்னம்பிக்கை மனம் கொண்டு
எழுந்து விட்டால் -
வெற்றி உங்கள் கைகளில்...!
முயற்சி இல்லாதவன்
முதுகெலும்பு
இல்லாதவன்
முயன்றால் முடியாதது
எதுவுமில்லை..!
வெற்றியாளர்களின் சூழலில்
நீ இருந்தால்
நீயும் அவர்களில் ஒருவன்..
முதல்வனாயிரு .. அல்லது
முதல்வனோடிரு...!