Thursday 21 November 2013

இதற்கு பதில் சொல்லிட்டு போங்களேன்.....



சேலம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி வீடுகள் தரைமட்டமானதில் தாய், மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 586 பேர்வரை பலியாகி உள்ள தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலிண்டர் வெடித்து மரணம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 10க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடித்து பலியாகின்றனர் என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த புள்ளிவிபரம்.

இந்த விபத்துக்களுக்கு பயன் படுத்துபவர்களின் கவனமின்மை மட்டுமே காரணமா? நுகர்வோர் பாதுகாப்புக்காக எரிவாயு ஏஜென்சிகளும், அரசும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கிறது? உபயோகப்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் போதுமானதல்ல. விபத்து ஏற்படாதவாறு தரம் மேம்படுத்த முடியாதா? எரிவாயு கசிவு ஏற்பட்டால் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையம் தெரிவிக்கிறது.  நுகர்வோர் பாதுகாப்பில் பெரும்பாலும் அலட்சியம்தான் நடக்கிறது.    

நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் தனியாக புதிய இணைப்பு வாங்கினோம்... அப்போதிலிருந்து ஒவ்வொரு சிலிண்டர் அந்த ரெகுலேட்டரில் பொருந்தும்... ஒவ்வொன்று பொருந்தாமல் ரெகுலேட்டரை திருப்பும் போதே கேஸ் கசிவு லேசாக தெரியும். காலையில் புகார் தெரிவித்தால் அன்று மாலையில் எதோ ஒரு நேரத்தில்தான் வருவார்கள்... வால்வுதான் பிரச்சினை என்று வேறு வால்வு மாட்டி அந்த நேரத்திற்கு சரி செய்து விட்டு போய்விடுவார்கள். இப்படியே அவ்வப்போது பிரச்சினை... ரெகுலேட்டரை மாற்ற சொல்லி கேட்டாலும் ரெகுலேட்டர் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு போய்விடுவார்கள்.. இப்படியே நீண்ட நாட்கள். நான் எப்போதும் ஜன்னல்களை திறந்து வைத்துவிடுவேன்.. ஒவ்வொரு முறையும் அடுப்பை அணைக்கும் போது ரெகுலேட்டரையும் ஆப் செய்து விடுவேன். கடந்த ஒரு மாதமாக ரெகுலேட்டரை திருப்பும் போதெல்லாம் புஸ் என்ற சத்தத்துடன் க்யாஸ் வெளியாவது நன்றாகவே தெரிந்தது. உடனே ஆப் செய்து மறுபடியும் புகார் செய்தால் மெக்கானிக் வந்து பாடிய பல்லவியையே பாடி விட்டு அந்த சமயம் வால்வை மாற்றிவிட்டு போய்விடுவார்கள். கொஞ்ச நாட்கள் பிரச்சினை இல்லாமல் இருக்கும்... மறுபடியும் அதே பிரச்சினை... சமைக்கும் போது லேசா க்யாஸ் வாடை அடிக்கும். என் கணவரிடம் சொன்னால் அவருக்கு எந்த ஸ்மெல்லும் தெரியலைன்னு என்பார்.( மூக்கு இருந்தா மட்டும் போதாது... அது வேல செய்யனும்...) அப்புறம் நான் திட்டுவேன், “ இங்க பாருங்க இதே பிரச்சினை நீங்களும் எத்தன வாட்டி புகார் பண்ணுவீங்க... எனக்கு ரெகுலேட்டர்லதான் ப்ராப்ளம் இருக்குன்னு தோணுது... அதை மாத்த சொல்லுங்க.. புது ரெகுலேட்டர் தர்றதுக்கு அவங்க ஏன் சாவறாங்க? சும்மா இதெல்லாம் வேலைக்கு ஆகாது எத்தனை முறை சொல்றது? நீங்க போய் சத்தம் போட்டுட்டு வர்றிங்களா இல்லையா?ன்னு அவரை திட்டி கொண்டிருந்தேன். அவரோ, “ ஏய்  நானும் இரண்டுமுறையும் மெக்கானிக் வர்றப்ப வீட்ல ஆள் இருக்கனுமேன்னு லீவு போட்டுதானே பார்த்தேன்... அவனுங்க எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்றானுங்க. அங்க போய் சத்தம் போடறதெல்லாம் வேலைக்கு ஆவாது.. அந்த ஏஜென்ஸிக்காரங்க... ...... கட்சிக்காரங்க....ஒண்ணும் பண்ண முடியாது. நமக்குதான் வேலை காமிப்பானுங்க... வேணும்னா நீ போய் கத்திட்டு வா...” என்றார்.

 ‘ சரி...நான் லீவு போட்டு போய் சத்தம் போடறேன்... நீங்க தாராளமா காலேஜுக்கு போங்க.... புது ரெகுலேட்டர் வர்ற வரை நான் சமைக்க முடியாது” என்று சொன்னதும், மனுஷனுக்கு என்ன பண்றதுன்னு புரியலை... இவ என்னடான்னா ரெகுலேட்டர்ல் ப்ராப்ளம்ங்கிறா மெக்கானிக் என்னடான்னா ரெகுலேட்டர் நல்லாயிருக்குதுங்கிறான்னு ! அப்புறம் அடுப்பு + ரெகுலேட்டரோடு தெரிந்த ஸ்டவ்- பழுதுபார்க்கும் கடைக்கு போனார். கடைக்காரர் செக் பண்ணிட்டு அடுப்பில் எந்த ப்ராப்ளமும் இல்லை... ரெகுலேட்டர் ஸ்விட்ச்சில்தான் ப்ராப்ளம் இருக்கிறது. ரெகுலேட்டரைதான் மாத்தனும். அதை அவ்வளவு ஈசியா மாத்திக்கொடுக்க மாட்டானுங்க... வர்ற மெக்கானிக் கிட்ட ஒரு நூறு ரூபாயை தந்தாத்தான் அவன் ரெகுலேட்டர் ரிப்பேர்னு சொல்வான். அவன் சொன்னாத்தான் கம்பெனிக்கு அனுப்பி புது ரெகுலேட்டரை தருவாங்க என்று சொல்லியிருக்கிறார். இவரும் வேறு வழியில்லாமல் மெக்கானிக்கிற்கு ரூபாயை கொடுத்த பிறகுதான் ரிப்பேர் என்று சொல்லி எழுதி கொண்டு போனான். இவர் ரெகுலேட்டரை ஏஜென்ஸியில் கொடுத்து புதிது வாங்க விண்ணப்பம், பணம் கட்டிய பிறகு வர இரண்டு நாட்களாகும்... நேரில் வந்து கையெழுத்து போட்டு வாங்கி போகனும் என்று சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அவர் அலைந்து பிறகு ஒரு வழியாக புது ரெகுலேட்டர் கிடைத்து பொருத்திய பின் எந்த பிரச்சினையும் இல்லை. 

படித்த எங்களாலேயே நுகர்வோர் பாதுகாப்புக்காக இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்றால் பாமர மக்களும், எளியவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? இன்று செய்தி தாளில் சேலம் எரிவாயு விபத்து பற்றி படித்ததும் மனசு கொதித்தது.. அதுசரி சிலிண்டர் விபத்தில் சாவறவன் எவனோ முனியம்மா பொன்னம்மா குடும்பம்தானே..? இவனுங்களுக்கு என்ன? அடுப்படியில நின்னு சமைக்க போறது பிரதம மந்திரியோ முதலமைச்சரோ, இல்ல அமைச்சருங்க இல்லை இல்ல..! பயன்படுத்துபவர்களின் கவனமின்மை மட்டும் காரணம் கிடையாது பாதுகாப்பான தரமும் இல்லாததுதான் என்று  நினைக்கிறேன். தவறுகளை தட்டனும்னு நாம் நினைச்சாலும் தப்பு செய்றவன்  நம்மை விட பூதாகாரமா விஸ்வரூபம் எடுத்துகிட்டு நம்மை நசுக்கி காணாம செய்துடறான்.

ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒருத்தர், ரெண்டு பேர் குரல் கொடுத்து ஒண்ணும் பண்ண முடியாது. யோக்கியமான அரசியலமைப்பு வரனும்.. தப்பு நடந்தா சட்டம் தண்டிக்கும்னு பயம் வரனும்... அப்பத்தான் ப்யூன்லர்ந்து அதிகாரி வரை அவனவன் வேலைய ஒழுங்கா செய்வான். ஆனா யோக்கியமான அரசியல்னு ஒண்ணு நம்ம நாட்டுல வருமான்னுதான் சந்தேகமா இருக்கு... ஓட்டுபோடற மதிகெட்ட ஜனங்கதான் மாறனும்... ஊருக்கு ஒரு நல்லவனை நாமே அடையாளம் காண்பிச்சு பதவியில் உட்கார வைக்கனும். நல்ல  நோக்கமும், திறனும் உள்ள இளைஞர்கள், இளைஞ்சிகள் எனக்கு தெரியும்.. தேர்தல்ல எங்க தொகுதியில் அவங்களை நிற்க வச்சா எந்த விளம்பரமும் இல்லாம... வோட்டுக்கு காசு இல்லாம ஒரு பைசா செலவு பண்ணாம மக்கள் அவங்களை தேர்ந்தெடுப்பாங்களா? நான் தனி தனியாக தெரு தெருவாக  நாலு மணி நேரம் இதெல்லாம் சொன்னால் கூட எனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லிட்டு போவாங்க. இப்படியே போகாது நாளைய சமுதாயம் மாறும்னு நம்பிக்கை வைக்கிறேன்... !
       
   வெளி நாடுகள்ல எரிவாயு விபத்துக்கள் இருக்கிறதா? உங்க நாட்டில் இதில் அரசு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை இந்தியா அல்லாம மற்ற நாட்டில் இருக்கிறவங்க சொல்லிட்டு போங்க.....

Monday 18 November 2013

அழகான கனவுகள்.....!


“ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை...? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல... இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்....” என் கூப்பாடு எதுவும் அவர்களை சலனப்படுத்தவில்லை..

அவள் நேற்று கண்ட கனவின் பயங்கரத்தை சொல்லி கொண்டிருந்தாள்...” ப்பா... நேத்து ஒரு பயங்க்கர கனவுப்பா.... இப்படித்தான் தொடங்குவாள். எனக்கு தெரியும் என்னிடம் சொல்ல வரமாட்டாள். “ போடி காலையில் எத்தன வேலை இருக்கு... கனவாம்... கனவு அதெல்லாம் அப்பறம் கேட்கிறேன்... போய் ஸ்கூல் வொர்க் எல்லாம் முடி..” என்று விரட்டுவேன்.

“ ப்பா.... ரெண்டு கண்ணு மட்டும் வருதா... அது லோகியை துரத்திகிட்டே போகுது... அவ என்னை சத்தம் போட்டு கூப்பிடறா.... அச்சு...ப்ளீஸ் என்னை காப்பாத்துடின்னு கூப்பிட்டுக்கிட்டே ஓடறா.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைப்பா... அப்ப திடீர்னு ‘ அங்கிள்’ வண்டியில் வந்து .......

அவள் கைகளை விரித்து ... தலையை ஆட்டி திகிலுடன் சொல்லி கொண்டிருப்பதை அவளின் அப்பா முதுகை வளைத்து அவள் முகத்தருகே கண்களில் திக்.. திக்.. காட்டி “ அப்புறம் என்னாச்சி...? சுவாரஸ்யமாய் கேட்பார்.

கடைசியில் கனவு முடிந்து இரண்டு பேரும் சிரிப்பார்கள். அவள் கேட்பாள் ‘ “ஏம்ப்பா.. கனவெல்லாம் வருது?”

“ நாம எதையாவது நினைச்சதோ.. பார்த்ததோ... இல்ல கேட்டதோ மனசுக்குள்ள பதிவாயி அது கனவா வரும்டா...கண்ணா”

“ ம்... ம்... வரும்...  க்ராபிக்ஸ் படம்லாம் பார்த்துட்டு இருந்தா... இப்படித்தான் வரும்... ரெண்டு பேரும் எழுந்து குளிக்கறிங்களா இல்லையா..?” தினமும் விரட்டுவதே வேலையாக இருக்கும்.

“ ப்பா... அந்த பீச்ல நாம மூணு பேரும் வேகமா போய்கிட்டே இருக்கோமா.. அப்ப திடீர்னு அம்மாவை காணலைப்பா...

“ ஹய்யா... கனவுலயாவது காணாம போனாளே... பிசாசு... அப்புறம் என்ன ஆச்சு....?”

என் பேர் அடிபடவே கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்து நின்றதும்... அவள் கனவை பற்றி சொல்வதை நிறுத்தி விட்டாள்....” போம்மா... நீ எதுக்கு இங்க வந்தே? நீதான் கேட்க மாட்டேனுட்டே இல்ல.... அப்பறம் என்ன.... நீ வாப்பா....” அவள் அப்பாவின் காதை பிடித்து தன் முகத்தருகே கொண்டு வந்து கிசு கிசுப்பாய் சொல்லி கொண்டிருந்தாள்... ரெண்டு பேரும் அடுத்த வீட்டிற்கு கேட்குமளவு சிரித்து கொண்டிருந்தார்கள்...

ஒவ்வொரு நாளும் ஒரு கனவாய் சொல்லி கொண்டிருந்தாள்....

“ ப்பா... ரெண்டு அங்கிள் துப்பாக்கி வச்சிகிட்டு உன்ன துரத்திக்கிட்டே இருக்காங்கப்பா... எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சிப்பா... சாமி கிட்ட வேண்டறேன்... அப்ப வானத்துலர்ந்து பளிச்சின்னு ஒரு மின்னல் மாதிரி வந்துச்சா....

“பேசாம ராம நாரயணன் படங்களுக்கு இவ கதை சொல்லலாம்... நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கிங்க.. காலையில்  நான் மாத்திரம் இவ்வளவு வேலையா இருக்கறப்ப... உங்களை...” இந்த முறை அவள் அப்பாவின் தலையில் குட்டு விழுந்தது.

மும்முரமாய் சமையலில் இறங்கி கொண்டிருந்தேன்... இன்று ஏனோ கனவின் சத்தம் கேட்கவில்லை... எட்டி பார்த்தேன்... அவள் அப்பா குளித்து முடித்து ரெடியாகியிருந்தார்...

“ என்ன இன்னிக்கு கத எதுவும் ஓடலையா...? இத்தனை அதிசயமா காலையில் குளியல்?

“ அச்சு... இன்னும் எந்திரிக்கலை...”

“ ஏன் என்ன குட்டிம்மா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே...?” ஸ்டவ்வை அணைத்து பெட்-ரூமுக்குள் நுழைந்து அச்சுவை எழுப்ப கை தொட்டேன். அச்சுவின் உடல் அனல் போல் கொதித்து கொண்டிருந்தது..

“ என்னங்க... குட்டிம்மாவுக்கு காய்ச்சல் அடிக்குது...”

அடுத்த நிமிடத்தில் அவளின் அப்பாவும் பரபரப்பானார். அச்சுவை எழுப்பி மெல்ல பல் துலக்க வைத்து காபி போட்டு தந்து டாக்டரிம் போய் வீடு திரும்புவதற்குள் அரை நாள் ஓடி விட்டிருந்தது.

இரண்டு நாளும் அச்சுவிற்கு நல்ல காய்ச்சல்... “ உம்..” கொட்டி தூங்கி கொண்டே இருந்தாள்.

“கீதா... ரெண்டு நாள் நீ லீவு போட்டே இல்ல... நீ வேணா இன்னிக்கு ஆபிஸ் போயேன்... நான் ரெண்டு நாளைக்கு லீவு போடறேன்... அச்சு இந்த ஒரு வாரம் ஸ்கூலுக்கு போகவேண்டாம்...” அவளின் அப்பா... என்னிடம் சொல்ல..

“ ம் ஹூம் வேணாங்க... அங்க போனாலும் எனக்கு இவ மேலய கவனம் இருக்கும்.. வேலையும் ஓடாது... எனக்கு என் குட்டிம்மாதான் முக்கியம்...”  நானும் ஒரு வாரம் லீவு எடுத்திருந்தேன்.

இந்த ஒரு வாரமும் நான் சமைத்தேனா... சாப்பிட்டேனா என்பதையே மறந்திருந்தேன்.. அச்சுவின் பக்கத்திலயே ஒவ்வொரு நிமிடமும்...ஜூஸ் கொடுப்பதும், தைலம் தேய்த்து விடுவதுமாய்... அவள் தூங்கும் நேரத்தில் மட்டும் அவளின் அப்பாவிற்கு போன் செய்தேன், “ என்னங்க குட்டிம்மா ரொம்பவே சோர்ந்திட்டா... விட்டு விட்டு ஜூரம் வருது.. வேற டாக்டர் கிட்ட போவமா..?”

“ ஏய்... ஒண்ணும் பயப்படாத... எல்லா டெஸ்ட்டும்தான் பார்த்தாச்சு இல்ல... இது வைரல் பீவர்தான்... டாக்டரே என்ன சொன்னார்...ஒரு வாரமாவது இருக்கும்னுதானே? இன்னும் ரெண்டு நாள்ல நார்மலாயிடுவா...

ஒரு வாரமாய் குட்டிம்மாவின் கனவுகள் சொல்லாமல் வீடே நிசப்தமாயிருந்தது.. வாழ்க்கையில் எதுவுமே தேவை இல்லை போல் இருந்தது. அவளின் அப்பாவிற்கும் அந்த நிசப்தம் கொடுமையாக இருந்தாலும் ஆண் என்பதில் மனதை திடமாய் இருப்பது போல் பொய்யாய் போர்த்தி கொண்டிருந்தார்.

“ம்மா... பசிக்குது...” அச்சு மெல்ல கேட்டதும்... மணி இரவு பணிரெண்டாகியிருந்தது.

“ குட்டிம்மா... இப்ப ராத்திரி பண்ணெண்டு மணி இந்த நேரத்துக்கு என்ன சாப்பிடுவே... அப்பா பிஸ்கெட் தரட்டுமா...?”

“இருங்க... இப்பதான் பசிக்குதுன்னு கேட்கிறா எத்தனை மணி ஆனா என்ன... நீ என்ன சாப்பிடறயோ சொல்டா அம்மா செஞ்சி தர்றேன்...”

  ரொம்ப பசிக்குது... பிஸ்கெட்டெல்லாம் வேணாம் இட்லி வேணும்மா...”

அடுத்த நிமிடமே பலத்தை கூட்டி கிச்சனுக்குள் நுழைந்து இட்லி ஊற்றி தட்டில் போட்டு வந்து சின்ன சின்னதாய் பிட்டு அவளுக்கு ஊட்டியதும் கொஞ்ச நேரம் கழித்து தூங்கிவிட்டாள்.

“ கீதா ... அவளை விட இப்ப நீ படுத்துருவ போல இருக்கே.... ஒழுங்கா சாப்பிடுடி..  எவ்வளவு பேசுவ... நீ போய் இப்படி இருக்கலமா...?

“ எவ்வளவு பேசினாலும் நான் அம்மாங்க.... இந்த ஸ்தானத்துல எனக்கு அவதான் பெரிசு..  இந்த உலகத்துல வேற எதுவும் எனக்கு பெரிசா தெரியலை... நான் நேசிக்கிற இலக்கியம் கூட இப்ப போடா போன்னு இருக்கு.... என் குட்டிம்மா பழைய படி எழுந்து வீடு பூரா ரகளை பண்ணனும்... எனக்கு அவ வேணும்... நீங்க வேணும்...” அவள் அப்பாவின் தோள்களில் சாய்ந்து விம்மி கொண்டிருந்தேன்.

காய்ச்சல் படுத்தியதில் ரொம்பவே சோர்வாகியிருந்தாள்.... கடவுளே... என் குட்டிம்மாவுக்கு எந்த கஷ்டத்தையும் குடுக்காதே... வேணும்னா அவ அம்மாவுக்கு குடு...”  என் வேண்டுதலை கேட்டவள்... லேசாக வாய் திறந்து, “ ம்மா.. உனக்கு என் மேல் அவ்வளவு ப்ரியமா...?”

“ ஏண்டா... அப்படி கேட்கிற?  நீதாண்டா என் கனவே...!”

“ ஆனாலும் அப்பா மாதிரி என் கனவை எல்லாம் நீ கேட்கறதே இல்ல... சொல்ல வந்தா திட்டற இல்ல... “

“ அதுக்காக அம்மாவுக்கு உன் மேல் ப்ரியம் இல்லைன்னு நினைச்சுகிட்டயா... ? அம்மா வீட்டையும் பார்க்கனும், ஆபிசுக்கும் போகனும் இல்லையா... அந்த டென்ஷன்ல எதாவது சொல்வேனே தவிர நீதாண்டா என் உயிரு... உனக்காகத்தாண்டா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்...”

“ ம்மா... எனக்கும் உன்ன ரொம்ப புடிக்கும்...லீவ்ல பாட்டி வீட்டுக்கு போனா கூட நீயில்லைன்னா என்னால இருக்கமுடியலைன்னுதான்மா ஓடி வந்துடறேன்...!” அன்பாய் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ சரி குட்டிம்மா.. நான் நேத்து ஒரு சூப்பர் கனவு கண்டேண்டா... நீ... நான் அப்பா எல்லாம் ஜாலியா டூர் போறோம்... அங்க ஒரு அழகான வீடு... வீட்டுக்கு பக்கத்துல சல சலன்னு சின்னதா ஒரு ஓடை போயிட்டிருக்கு.... பக்கத்துல பெரிய ரோஜா தோட்டம்.......”  காணாத கனவை பொய்யாய் சொல்லி கொண்டிருந்தேன்... ஆர்வமாய் எழுந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தாள்.

இரண்டு நாட்களில் அச்சு பழையபடி திரும்பியிருந்தாள்.

“ ம்மா....  நேத்து ஒரு பயங்க்கர கனவும்மா....” தலையை ஆட்டி கண்ணை உருட்டி சொல்ல வந்த அவளிடம், “ ம் அதுசரி உனக்கு எப்ப பார்த்தாலும் பயங்க்கர கனவுதான் வருமா?  ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தேன்...

அவள் கனவை கேட்க தினமும் ஒரு மணி நேரம் முன்பாக வேலை முடித்துவிட தீர்மானித்திருந்தேன்.

Wednesday 13 November 2013

கடவுள் நேரில் வந்தால்....



கடவுள் நேரில் வந்து எந்த வயதிற்குள் வேண்டுமானாலும் நீங்கள் போகலாம் என்றால் எந்த வயதிற்கு செல்வீர்கள்...? என்று  சிலரிடம் கேட்டதற்கு...


யசோதாபழனிச்சாமி, ஈரோடு :
அப்படி நிஜமாவே கேட்டா நல்லாயிருக்கோமுங்க... எனக்கு 12 வயசு வேணும்பேனுங்க... ரொம்ப சின்ன குழந்தையா இருந்தா ஒண்ணும் தெரியாது.. ! என்னோட 12 வயசுல எப்படி வெளையாடிருக்கேன் தெரியுங்களா? எங்க அம்மா கூட சும்மா கழுதைங்களாட்டாம் எதுக்குடி எல்லாம் குதிக்கிறீங்கன்னு எல்லாரையும் விரட்டுவாங்கங்கோ..!  அந்த வயசுல எந்த கவலையும் கெடையாது. வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்கும்.. ஸ்கூல் விட்டா விளையாட்டு... விளையாட்டு...தானுங்கஎன் பசங்களுக்கு நான் விளையாடின வெளையாட்டெல்லாம் தெரியாதுங்க... அதுங்க நீங்க என் வயசில கம்ப்யூட்டர்பார்த்தீங்களா...ன்னு  கேட்டு அவங்க விளையாடற கம்ப்யூட்டர் கேம்ஸை பத்திதான் உசத்தியா சொல்லுதுங்க...! என் வாழ்க்கையில் எந்த சமயத்திலும் நான் விளையாடின விளையாட்டுக்கள்தான் மறக்க முடியாத சந்தோஷமா தெரியும்ங்க...இப்ப கூப்பிட்டா கூட நான் வெளையாட ரெடி...! என்றவர்,  சமீபத்தில் டூர் சென்ற இடத்தில்  தங்கள் பிள்ளைகள், குடும்பத்தோடுகொல.. கொல.. யாமுந்திரிக்கா ... விளையாட்டு விளையாடிட்டிருந்தப்ப மொத்த சனமும் அவங்களை வேடிக்கை பார்த்துச்சாம்ல...!


லலிதா சண்முகம், திருச்சி: என் குடும்பத்தில நான் மூத்த பெண்ணா பிறந்ததால குழந்தைகளுக்கான உணர்வுகள் எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டுச்சி.... என் தம்பி, தங்கைகளை பார்த்துகிட்டதால என்னால சின்ன வயசில் விளையாட முடியலை... படிப்பையும் விட்டு நிறுத்திட்டாங்க... அதனால நான் மறுபடியும் குழந்தையா மாறி ஸ்கூல் படிக்கனும், நிறைய விளையாடனும்...!


தாரகை, கும்பகோணம்: நிச்சயமா குழந்தை பருவத்துக்குத்தாங்க... குழந்தை பருவத்திலதான் கெடுதல், நம்பிக்கை துரோகம் இதெல்லாம் தெரியாது. அதனால் எந்த கவலையும் இருக்காது.  


இப்படியே நான் கேட்ட பொது ஜனங்க  20  பேரும் குழந்தை பருவத்துக்கு போக ஆசைப்படறதாவே சொன்னாங்க....

அப்படியே இவங்க கிட்டயும் கேட்டப்ப...

திண்டுக்கல் தனபாலன் அவர்கள்:  
வணக்கம்.... நல்ல கேள்வி...

பதில் பாட்டில் :

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு... பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா...? என்றும் குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா...?


பாலகணேஷ் அவர்கள்: 
கடவுள் மட்டும் நேர்ல என் எதிர்ல வந்தா... முதல்ல வரம்லாம் கேக்க மாட்டேங்க... ‘ஏன்யா... இப்படில்லாம் கஷ்டப்படுத்தி பரிசோதனை பண்ணிப் பாக்க நான்தான் கெடைச்சேனா’ன்னு அவரை ஓடஓட விரட்டி செம மாத்துதான்...! இதே வரத்தை என் ஃப்ரண்ட் உஷா அன்பரசு தர்றதா இருந்தா... நான் என்னோட ஆறாவது வயசுக்குத் திரும்பச் செல்ல விரும்புகிறேன் என்பேன். காரணம்... ரொம்ப ஸிம்பிள்! வாழ்வியலின் கவலைகள், நட்பு, துரோகம், இன்னபிற விஷயங்கள் எதுவும் மனதுக்குள் நுழையாமல் பள்ளி, அதன்பின் விளையாட்டு என்று கழிந்த மனோகரமான பொழுதுகள்!


 என்ன.. எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி ஒரே மாதிரி வரம் கேட்கிறாங்களேன்னு நினைச்சேன்.. இவங்க கொஞ்சம் மாத்தி சொன்னாங்க...

வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் :

16 வயதுக்கு மட்டுமே ! 

ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக எப்போதுமே இருக்கவே விரும்புவேன். 


 அன்பின் சீனா.ஐயா அவர்கள் :
இப்பொழுதிருக்கும் வயதிற்குக் கீழே போக விருப்பமில்லை - மேலேயும் அதிக பட்சமாகச் செல்ல விருப்ப மில்லை.  கேட்கும் கடவுளை குறைத்து ம்திப்பிட்டு ஒரிரு வயது அதிகமாகக் கேட்கவும் மனதில்லை. எனவே அதிக பட்சமாக ஒரு 5 வயதிலிருந்து 10 வயதுக்குள் ஏதேனும் ஒரு வயது அதிகமாகச் செல்லுகிறேன் எனக் கூறுவேன். 
  
மதுரை தமிழன் அவர்கள்: 

 எனது --. காரணம் அந்த வயதில்தான் என் மனைவி குழந்தை உண்டாகி இருந்தாள். நான் தந்தையாகிவிட்டேன் என்ற சந்தோஷத்தைவிட நான் என் மனைவிக்கு ஒரு தாயாய் ஆகி நான் தாயுமானவனாக ஆன வயது அது. தாய் அருகில் இல்லாத குறை அவள் மனதில் எழாதவாது பார்த்து கொண்ட தருணம் அது. குழந்தை பிறந்த பின் அவள் தாய் வந்த பின்னும் அவளின் தாயைவிட ஒருபடி மேலேதான் நான் பார்த்து கொண்டேன். அதன் பின் எனது
 குழந்தையை என் மனைவியைவிட (தாயைவிட ) மேலாக பார்த்து கொண்ட தருணங்கள் .

( மதுரை தமிழன் கோடிட்ட இடத்தை நிரப்பி இருந்தார்... பொதுவில் பகிரும் போது சொல்லலாமா என்று அவரிடம் அனுமதி கேட்கவில்லை...) (ஆஹா மதுரை தமிழன் எப்ப அப்பா ஆனார்னு தெரிஞ்சிக்கனும்னா ஒரு அமௌண்ட்டை என் அக்கவுண்டில போடுங்க பொது ஜனங்களே...)


 

 -----------------

 நிறைய பேரின் மன நிலையை அறியவே இந்த கருத்துகேட்பு....!  எந்த கவலையும் இல்லாம சுதந்திரமா சிறகடிக்கிற குழந்தை பருவத்துக்கு போகத்தான் நிறைய பேரு ஆசைப்படறாங்க...!


நாளை குழந்தைகள் தினம்... இன்னிக்கு காலையிலர்ந்தே என் பொண்ணு ரொம்ப ஹேப்பியா இருந்தா.. நாளைக்கு ஸ்கூல்ல ஸ்பெஷல் புரோக்ராம்ஸ்.. டான்ஸ் ஆடப்போறாளாம்... ஆப் டே க்ளாஸ் கிடையாதாம்... ஜாலியா விளையாடுவாங்களாம்கல்வி முறையும், போட்டிகள் நிறைந்த சமூகமும் இவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றி விட்டதில் இவர்களுக்கு படிப்பை தவிர்த்து ஒரு அரை நாள் கிடைக்கும் போது எவ்வளவு மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்றே தோன்றியது...

  
குழந்தைகள் உலகம் மகத்தானது....! அந்த உலகத்துக்கு மீண்டும் போக முடியாது என்றாலும் அந்த உலகோடு இணைந்து கொண்டாடுவோம்...!

 குழந்தைகள் தினத்திற்காக இன்னும் சில செய்திகளை சொல்ல  நினைத்திருந்தேன்... இந்த பதிவே நீளமா இருக்கு ..  


கடவுள் நேரில் வந்து எந்த வயதிற்குள் வேண்டுமானாலும் நீங்கள் போகலாம் என்றால் எந்த வயதிற்கு செல்வீர்கள்...?  நீங்களும் சொல்லிட்டு போங்க....  நானும் அடுத்த பதிவுல சொ(கொ)ல்றேன்....!