Thursday 30 May 2013

கலவர பூமிக்குள் காதல்....

 



  அந்திப்பொழுதுகளுக்கே ஒரு வாசம் உண்டு.  அவன் அவள் வீட்டை கடக்கும் நேரம்.. வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டே விழிகளால் விசாரிப்பாள்.
அவனும் அப்படியே!
இப்படியே ஒரு மாதம். இப்படியே போய்விடுமா? எப்படியும் பேச வேண்டும்..  அவனுக்குள் ஏக்கம்… மெல்ல தலைசீவும் பாவனையில் ஒரு சின்ன  ஒரு கையசைப்பு’ போய்விட்டு வருகிறேன்’..இமைகளை மூடி திறந்து சரி என்பாள்.
போதவில்லை.. பெரும் மழையிடையே மின்னல்  நொடியில் வெட்டி செல்வது போல  நிமிட பார்வைகளின் துளைப்பு போதவில்லை. நல்ல வேளையாய்  பார்வை எட்டும் தூரத்திலொரு டீ கடை.  தொண்டையும் பார்வையும் விழுங்கி கொள்ள கடை போட்டவனுக்கு  கணக்கில்லாத நன்றி சொல்லிக்கொண்டான்.  தே நீரா.. தேனீரா தெரியவில்லை  எதிரில் அவள்!  அக்கா குழந்தைக்கு அக்கறையாய் சோறூட்டி கொண்டிருந்தாள். ‘ இங்க பார்த்தியா.. பூச்சி.. அங்க பாரு காக்கா.. அங்கு.. இங்கு என்று கைகாட்டி கொண்டிருந்தாலும்  கண்கள் மட்டும்  அவனை காட்டி கொண்டிருந்தது.  பார்வைகளின் பரப்பளவு முடியவில்லை பாழாய் போன தே நீரின் கொள்ளவு முடிந்துவிட்டது. மெல்ல கடக்கிறான் அவள் வீட்டை தாண்டி,
‘ இதப்பாரு கொரங்கு… குழந்தையிடம் சத்தமாய்..’
‘அடி என் செல்ல பிசாசே.. என்னையா சொல்கிறாய்.. என்றாவது கிடைக்கும் அப்போது  இருக்கு உனக்கு’.. குறுஞ்சிரிப்பை கிள்ளி விட்டு கடக்கிறான்.
 அவள் வீட்டை கடக்கவே ஆறு முறை  தே நீர் அருந்தும் வழக்கமாய் போனது.  இரண்டொரு முறையாவது கிடைத்து விடும் ஜன்னல் வளையங்களுள் அவனை தேடும் அவள் விழிகளின் தரிசனம்..!
சந்தேகமில்லை  அவன் மனதுக்குள் அவளும் அவள் மனதுக்குள் இவனும் ஊடுருவித்தான் போயிருக்கிறார்கள்..  கேட்டு விடுவோம்.. கேட்டு விடுவோம்.. மை தொட்டு எழுதியதெல்லாம் உண்’மை’ காதலின் மேன்மை!   வாகாய் சட்டைப்பையில் தஞ்சம் கொண்டது நான்காய் மடித்த அந்த கடிதம்.
எப்படி சேர்ப்பது..?  வாயிலில்தான் நிற்கிறது வண்ண மயில்.. வந்து கொண்டிருந்தான் பொடிபையன்.. சுற்றும் முற்றும் பார்த்தான்.. எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..? இருக்கட்டும் அவனுக்காகத்தான் போலும்.  முகவரி, முத்திரை இடாத கடிதங்களுக்கெல்லாம் குட்டிபயல்கள்தான் தபால் காரர்கள்.  மனது இடித்தாலும் வேறுவழியில்லை… லஞ்சம்  காதலையும் விட்டு வைக்கவில்லை.  மிட்டாயை தந்து மின்னலிடம் சேர்க்க சொன்னான். .  நான்காய் மடித்த காகிதம் எட்டாய் சுருங்கி கொண்டது அவள் உள்ளங்கைகளுக்குள்… யாரேனும் பார்த்து விடும் பயம்.
இதயத்தை வடித்திருந்தான். எத்தனை முறைதான் படிப்பது.. இன்னமும் மனமில்லை கிழித்து போட.  தலையணை உறைக்குள் தஞ்சம் கொண்டது. நித்தம் கனவுகளை சுமந்து கொடுத்தது.   கால் மணியில் வருபவள் அரை மணி நேரமாய் நீராடும் அவள் அம்மாவுக்கு தெரியாது மிச்ச மணிகளை கொத்திகொண்டிருப்பது  காதல் வாசிப்பென்று..!
காதல் தேசத்தில் அவர்கள் ராஜாங்கம்! கற்பனை பிரதேசங்களில் அவர்கள் உலா. நாளும் வளர்ந்தது கனவுகளின் கோட்டை. 
யாரோ யாரோவாய் சன்னிதியில் இருவரும் எதிரெதிரே.. இறைவா சேர்த்து விடு இதயங்களை..!
காலம் கணக்கு சொல்லும்.  இடமாற்றம்  அவனுக்கு.. எதோ சொல்லி வந்திருந்தாள்.. முதன் முதலாய் சந்திக்க.. முதல் சந்திப்பே பிரிவை சொல்லவா..?  கண்களில் கர கரத்தது கண்ணீர் வார்த்தைகள். மெல்ல தேற்றினான்..  யுகம் மெய்யென்றால்  திரும்ப வருவேன் மணமுடிக்க!
யுகம் மெய்தான் வருவான்..  சாதியும் சம்பிரதாயங்களும் ஒன்று சேர்க்குமா இல்லை  ஊரும் உறவுகளும் இரண்டு படுமா..? கலவர பூமிக்குள் காதல் கலங்கித்தான் நிற்கிறது..!
 ***************************************************************************************************
( ரசித்து ரசித்து வளர்ந்த கடித காதல் இப்போது இல்லை ! யாரோ எழுதிய காதல் மொழிகள் குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சலாகவும் மாறிவிட்டது.. கால ஓட்டத்தில் காதலும் வேகமாக தோன்றி  அதே வேகத்தில் காணாமல் கொண்டிருக்கிறது. 
சங்க கால பாடல்களில் சுடுகிறார்.. கண்ணதாசன் சொன்னதையே வார்த்தை மாற்றி சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் கவிஞர் வைரமுத்து பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தண்ணீர் தேசம் முதல் மூன்றாம் உலகப்போர் வரை  ரசித்து படிக்காமல் இருக்க முடியவில்லை.  கவிதை தொடர் ஒன்று நாமும் முயற்சிக்கலாமே என ஆவல் வந்தது.. ஆனாலும் நேரங்கள் அதற்கு இல்லை. கண்களில் ஆரம்பித்து கடிதங்களில் வளர்ந்த காதலை பற்றி ஒரு பக்கமேனும் எழுதுவோமே என்று எழுதியிருக்கிறேன்.  படிக்கிறவர்களுக்கு  கவிதையா கதையா தோணுதோ இல்லையோ  ஏதோ ரசிச்சி கிறுக்கிட்டேன்.  ஆஹா ஒருத்தர் டீ கடையில் நின்னு ஸைட் அடிச்சி லவ் லெட்டர் கொடுக்கறதை இப்படியெல்லாம்  எழுதலாமா? ஹா..ஹா..!

Tuesday 28 May 2013

தனிக்குடித்தனம்.......






" என்னங்க நீங்க பாட்டுக்கு ஆபிஸ் போறதும் வரதுமா இருக்கிங்க.. நம்ம அருண் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான்.. அவனுக்கு ஒரு கல்யாணமும் பண்ணிட்டா ஒரு பாரம் குறையும்...." அலுவலகத்திலிருந்து வந்த வெங்கடேசன் கைகளில் காபியை கொடுத்து கேட்டாள்.
  “ விஜயா நம்ம பசுபதியோட பெண்ணை பார்க்கலாமா? எம்.எஸ்ஸி மேத்ஸ் முடிச்சிருக்களாம். இப்போதைக்கு தனியார் பள்ளியில வேலை செய்யறாளாம்.
“ ஆமா.. அந்த ப்யூன் பசுபதியோட பெண்ணையா? உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா நம்ம அருண் அவன் ப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட என் மாமனார் ஸ்கூல்ல பெல் அடிக்கிற ப்யூன்னு பெருமையா சொல்லிக்கவா? எத்தனை லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சிருக்கோம். நம்ம அந்தஸ்துக்கு தகுந்தா மாதிரிதான் ஒரு பார்க்கனும்.
“தரகர் ஒரு ஜாதகம் கொடுத்துட்டு போயிருக்கார். பொண்ணு சி.ஏ பண்ணிட்டிருக்காளாம். அவ அப்பா வக்கீலாம் .. ஒரே பொண்ணு வசதியானவங்க … எதிர்பார்க்கறதை விட அதிகமா செய்வாங்களாம்.”
“எப்படியோ போ நான் சொல்றதை என்னவா கேட்க போற.. அப்படியே தப்பி தவறி எதாவது கேட்டுட்டாலும் சரிபட்டு வரலைன்னா எல்லாம் உங்களால்தான்னு பிலு பிலுன்னு புடிச்சுக்குவே..”
நிஷாவை பார்க்க போயிருந்தார்கள். விருந்து பார்த்து பார்த்து செய்திருந்தார்கள். அருணுக்கு  நிஷாவை பார்த்தவுடனே பிடித்து போனது.
பெண்ணின் அம்மா விஜயாவிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தாள். “ ஒரே பொண்ணு செல்லமா வளர்ந்துட்டா. வீட்டு வேலை எல்லாம் செய்ய மாட்டா.. காபி போடக்கூட தெரியாது. உங்க வீட்டுக்கு வந்தாலும் செய்யமாட்டா… எதையும் முதல்ல சொல்லிடறது பெட்டரில்லே… அப்புறம் வீட்டை துடைக்கல… காபி போடலைன்னு சொல்லக்கூடாது… எங்க வீட்ல எல்லாத்துக்கும் வேலைக்காரி வச்சிருக்கோம்…”
“ ஆமா  நாமதான் வீட்ல கெடக்கிறோம்.. அவங்கவங்க வேலைக்கு போக போறாங்க..  அருணும் ஓரே பையன் உயிரையே வச்சிருக்கோம்.. அவங்க சந்தோஷமா இருந்தா போதும். எனக்கு தெம்பு இருக்கற வரை நானே செஞ்சிட்டு போறேன்…”
 நூறு பவுன் நகையும் காரும் விஜயாவின் கண்ணை மறைத்தது. நல்ல நாள் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். நிச்சயம் முடிந்ததிலிலிருந்து அருண் அடிக்கடி போனில் பேசி கொண்டிருந்தான்.
“ அருண் இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் வந்துடேன்… இந்த இடம் கூடி வரனும்னு முருகனுக்கு வேண்டிகிட்டிருந்தேன்..  ஒரு நடை கோயிலுக்கு போயிட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடலாம். அப்புறம் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சப்பறம் குடும்பத்தோட போய் அபிஷேகம் பண்ணிட்டு வரலாம்…”
“ அம்மா… இன்னிக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு… நீயே போய் வந்துடேன்மா…”
குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து கும்பிட வேண்டுமென்று விஜயா சொன்னதால் அண்ணன் வீட்டிற்கு சென்று அழைத்துவிட்டு, கடைக்கு போய் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு, அச்சிட்டு தயாராயிருந்த பத்திரிக்கைகளையும் பார்சல் எடுத்து கொண்டு  வருவதற்குள் வெங்கடேசனுக்கு களைப்பாக இருந்தது. “ சும்மாவா சொன்னாங்க வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்னு… அவளுக்கென்ன வீட்டில் உட்கார்ந்து கொண்டே எல்லாத்தையும் சொல்லிடுவா.. “ முணு முணுத்து கொண்டே ஸ்கூட்டரை நிறுத்தி ஒரு காபியாவது சாப்பிடலாம் என்று “ ஆவணா இன்னில் நுழைந்தார். காபியும், மெதுவடையும் சொல்லிவிட்டு பார்வையை படர விட்ட போது அந்த ஏ.சி அறையின் கடைசி டேபிளில் சின்ன வெளிச்சத்தில்.. அருண் நிஷாவிடம் வெகு ஆர்வமாய் எதோ பேசி சிரித்து கொண்டிருந்தவன் அப்பாவை கவனித்து ஒரு நிமிடம் முகம் மாறியவன் வேகமாக எழுந்து வந்தான்,
“ அப்பா வந்து… இன்னிக்கு  நிஷாவிற்கு பர்த்டேவாம் போன் பண்ணினா அதான் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு … “
“ சரிப்பா பரவாயில்ல… நீ ஒண்ணும் சங்கடப்படாத.. நான் காபி மட்டும்தான் சொல்லியிருக்கேன்.. நீ மெதுவா சாப்பிட்டே வா.. “
பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் எதற்காக எழுந்து போனான் என்பதை கூட கவனிக்காமல் மெனுவில் ஆழ்ந்திருந்தாள்.. ஸ்கை ப்ளூ நிற டிசைனர் ஸாரி அருண் எடுத்து தந்திருக்கலாம் என்று தோன்றியது. அருணுக்கு சின்ன வயதிலிருந்து ஸ்கை ப்ளூ ரொம்ப பிடிக்கும்.. பேனா, பென்சில் எதுவானாலும் அந்த கலரிலே வேணுமென்று கேட்பான்.
ஒரு சுப தினத்தில் திருமணம் முடிந்தது. பத்து நாட்கள் ஹனிமூன், விருந்து என்று இருவரும் சுற்றி கொண்டே இருந்தார்கள். அம்மாவை சாப்பிட்டியா என்று கேட்க கூட மறந்தை அருணை வித்தியாசமாய் எதுவும் நினைக்கவில்லை விஜயா. கல்யாணமான புதுசு சந்தோஷமாய் இருக்கட்டும்.. இவளாகவே சென்று அருணை ஆர்வமாக விசாரிப்பாள்.
லீவு முடிந்து அருண் வேலைக்க செல்லும் நாள்..” அம்மா நிஷாவை எதுவும் வேலை எல்லாம் சொல்லாதே அவளுக்கு எதுவும் தெரியாது.. நீயே சமைச்சு வை.. மத்தியானம் நான் வந்துடறேன்…” கிளம்பினான்.
டூ வீலரை உருட்டினால் இருபது நிமிடத்தில் அலுவலகம்.. மதியம்  எப்போதும் வீட்டுக்கு வந்து விடுவான்.. அவன் இரண்டு மணியானாலும் விஜயாவும் சாப்பிடாமல் காத்திருப்பாள்.
புது மருமள் இருக்கிறாள் என்று ஒரு கூட்டும் கேசரியும் எக்ஸ்ட்ராவாக சமைத்து விட்டு பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து ஹாலில் வந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தாள். மணி ஒன்று ஆக ஐந்து நிமிஷம் இருந்தது. நிஷா இன்னமும் ரூமை விட்டு வெளியில் வரவில்லை. டி.வி யை போட்டு உட்கார்ந்தாள். விளம்பரம் முடிந்து தொடர் ஆரம்பித்த போது காலிங் பெல்.. வெளியில் போன வெங்கடேசனாகத்தானிருக்கும்.. இருக்கும் என கதவை திறக்க அருண் நின்றிருந்தான்.
 நேராக ரூமுக்கு சென்றவன் பத்து நிமிடங்கள் சிரிப்பு உரையாடல் முடிந்து வெளியில் வந்தார்கள்.
“ அம்மா.. நீ அப்பா வந்தவுடன் சாப்பிடு டைமாயிடுச்சி எங்களுக்கு எடுத்து வையேன்…”
மணி ரெண்டானாலும் சாப்பாட்டுக்கு வராதவன் இப்போதெல்லாம் ஒரு மணிக்கே  ஆஜராகிவிடுகிறான். இடையில் ஒவ்வொரு நாள் பதினொரு மணிக்கு டீ சாப்பிட வந்தேன் என்பான். நிஷாவிடம் அரட்டை அடித்து விட்டு இவர்கள் எதிரிலேயே “ பை..செல்லம்..” கன்னத்தை தட்டி விட்டு போனான்.
அவளுக்கு வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டும் தூங்குவதும் சுகமாய் பழகிவிட்டதால். ஒரு மாதமாகியும் அவள் போக்கு மாறவில்லை காலையில் எட்டு மணிக்கு மேல்தான் எழுந்திருப்பதும், சாப்பிட்டு விட்டு ரூமுக்குள் போய் கதவை தாளிட்டு கொள்வதுமாய் இருந்தாள்.
 பொறுத்து பார்த்த விஜயா ஒரு நாள், “ என்னம்மா எப்பவும் ரூமுக்குள்ளயே தனியா இருக்க… அருண் வந்தாதான் வெளிய வர்றே.. வந்து எங்களோட கல கலப்பா பேசு… கொஞ்ச கொஞ்சமா சமைக்க கத்துக்கோ.. இனிமே உங்க ரெண்டு பேர் துணியையும் நீயே துவைச்சி மடிச்சி வைக்கனும்..”
அவ்வளவுதான் உம் மென்று முகத்தை வைத்து கொண்டு உள்ளே போய் விட்டாள். அவள் அம்மாவிற்கு போனில் என்ன சொன்னாளோ தெரியவில்லை. விஜயாவிற்கு போன் செய்தாள், “ என்ன சொன்னிங்க என் பெண்ணை? நாங்கதான் அப்பவே சொன்னோம்ல… செல்லமா வளர்த்துட்டோம்னு… ஒரு வேலைக்காரி வச்சிக்கங்களேன்… மிஞ்சி போனா ஆயிரம்.. ரெண்டாயிரம் ஆகுமா..?”
வெங்கடேசனிடம் பொருமி தள்ளிவிட்டாள் விஜயா, “ நான் என்னமோ கொடுமை பண்ற மாதிரி இல்ல பேசறாங்க… எவ்வளவுதான் படிச்சாலும்  நம்ம வீட்டு வேலை கூட செய்ய தெரியாம என்ன பெண்ணுங்க இது…?
“விஜயா நீ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் பெண்ணைப்பாருன்னா பணத்தை தானே பார்த்தே..”  சிரித்தார்.
வழக்கமான வேலைகளுடன் இன்னொரு ஆள் வேலையும் கூடுதலாய் சேர்ந்து போனதில் சோர்ந்துதான் போனாள்.
“ அம்மா  உன்னால முடியலைன்னா.. வேலைக்கு ஆள் வச்சிக்கோ…” ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான் அருண். இருவரும் எங்கு போவதாக வருவதாக இருந்தாலும் கிளம்பு முன் ஒரு சின்ன இன்பர்மேஷன் மட்டும்தான். இவள் எதாவது கேட்டாலும், “ நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு வீட்டுக்கு வந்தா சும்மா நொய்..நொய்னு உசிரை எடுக்காதீங்க…  சந்தோஷமா இருந்தா உங்களுக்கு புடிக்காதே…” அம்மாவையே திருப்பினான்.
ஒரே வீட்டுக்குள் அவர்கள் இரண்டு பேர் ஒரு சுவற்றுக்குள்ளும், இவர்கள் தனியாக ஒரு சுவற்றுக்குள்ளும் இருப்பது போல் இருந்தது விஜயாவிற்கு வருத்தமாகவே இருந்தது.
“ என்னங்க நான் உங்க வீட்டுக்கு வந்த போது உங்க தம்பிங்க, தங்கைன்னு எவ்வளவு கல கலப்பா இருந்தோம்… மொத்தம் எட்டு பேர்னாலும் ஆளுக்கொரு வேலை செஞ்சிகிட்டு அரட்டை அடிச்சிக்கிட்டு அந்த நாள் எல்லாம் கண் முன்னால் வந்து கஷ்டமா இருக்கு… நமக்கு இருக்கிற ஒரே பையன் இப்படி மாறுவான்னு கனவுல கூட நினைக்கலை…”
“ விடு விஜயா காலத்துக்கு தகுந்த மாதிரிதான் போகனும்.. இன்னிக்கு ஒரே பிள்ளைங்கன்னு எல்லா வசதியோடயும், விட்டு கொடுத்து போக தெரியாம வளர்ந்துட்டு அவங்க விருப்பபடி.... தனியா வாழத்தான் விரும்பறாங்க.. ஒண்ணா இருந்து சேற்றை வாரி பூசிக்கிறதை விட அவங்க வாழ்க்கை அனுபவத்தை அவங்களே கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிகிட்டமே.. இருக்கவே இருக்கு ஊர்ல நம்ம வீடு அங்க போய்டலாம். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியா இருக்கும் என்ன சொல்றே..?”
பேரன், பேத்தி என்று வீடு நிறைந்து வாழ ஆசைப்பட்டவள் மனம் கலங்கி, “ அப்படித்தான் போகலாங்க.. பிள்ளைங்களை வளர்த்து ஒரு வாழ்க்கையை கொடுக்கிறதோட  நாம அவ்வளவுதான்..”

                                                     **************

Friday 24 May 2013

அப்படி என்ன நேரில் பேசாமல் போனில் பேசிய விஷயம்...?








சொல்ல வரும்போதெல்லாம்
சொல்ல நினைத்தது-
மறந்து விடுகிறது…
பார்க்கும் போது
கோபித்து கொள்வான்..
நேரில் சொல்வதற்கென்ன..?
அப்புறமாய்-
அலைபேசியில் சொல்வதுண்டு

  “ என்னங்க.. காபி பொடி
சொல்ல மறந்துட்டேன்..
மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க…!
 ******************************
ஏதோ விஷயமாக்கும் கேட்க வந்தவங்களுக்கு…
புரோவிஷன் லிஸ்ட் போடும்போதெல்லாம் எதையாவது மறந்துடுவேன்.. என் கணவர் கடையில் பாதி பொருளை வாங்கிட்டு இருக்கும் போதுதான் போனை போட்டு இப்படி சொல்வேன்… அப்புறம் அவர் கத்துவார் வீட்ல இருக்கும் போதெல்லாம் சொல்லாத… ஒரு ரூபா வேஸ்ட் பண்ணி போன்ல சொல்லுன்னு….!
( இனிமே டைட்டிலை நம்பி வரக்கூடாதுப்பான்னு நிறைய வாய்ஸ் கேட்கறா மாதிரி இருக்கு… அப்படில்லாம் கோச்சுக்க கூடாது.. இந்நேரம் ‘உர்’ ருன்னு இருந்த உங்க முகம் கொஞ்சம் குறும்பு சிரிப்போட மலர்ந்ததா இல்லையா…?)

Tuesday 21 May 2013

திருமணமான ஆண்கள் கவனிக்கவும்...




மாமா எப்படி இருக்கிங்க…?
“ உங்க அக்காவை கட்டிண்ட பிறகு என் தலையை பார்த்தாவே தெரியலையா எப்படி இருக்கேன்னு..”
தலையை பார்த்தேன்…
ஆடு வந்து ஒரு ஏரியா மட்டும் மேய்ந்து விட்டது போல காலியாக இருந்தது.
“ அட மாமா நீங்க ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றவரா இருக்கலாம் அதுக்காவ உங்க மண்டையையுமா இப்படி பிளாட் போடறது..?”
“ ஏய் உதை படுவே.. கல்யாணத்துக்கு முன்னாடி தலைய வாரினா சீப்பே உடைஞ்சிடும்… எல்லாம் பெண்டாட்டின்னு ஒரு ராட்சஸி வந்த பிறகுதான் இப்படி ஆயிடுது…”
“ சும்மா அக்காவை சொல்லிட்டிருந்தீங்க..மிச்சம் இருக்கிற ஏரியாவும் காலியாயிடும்… ஆமா..”
“ அங்க பாரு உங்க அண்ணனை … எங்கண்ணன்  படிய தலை சீவிகிட்டு  (நடிகர்) முரளி மாதிரி இருப்பாருன்னியே…. அவருக்கும் முன்ன கொஞ்சம், பின்ன கொஞ்சம் காணலை …. அவரையே போய் கேளு…”
“என்ணன்னே… நிசமாவா….?”
“ உங்க அண்ணி சமைய கட்டிலதானிருக்கா? பயந்து கொண்டே, கிசு கிசுப்பாய்..” ஆமாடி… பேய் மாதிரி ஒருத்தி உள்ள இருக்காளே அவளால்தான் இப்படி ஆச்சி….”
“ மச்சான் இங்க மட்டும் என்ன  வாழுதாம்.. போற போக்கை பார்த்தா சகலையும் நம்ம கூட கூட்டணியாயிடுவார் போலிருக்கே…”
கண்ணாடியில் தலை சீவிக்கொண்டிருந்த அவரை பார்த்தேன்.. ஆடு வந்து மேய ஆரம்பித்தவுடன் விரட்டி விட்டது போலிருந்தது.
“சகலை நீங்களாச்சும் உண்மை சொல்லுங்க…”
“ அது வந்து…  வந்து…
"ஏடாமா எதாது சொன்னே... ீட்டுக்கு ந்தும் இருக்கு கச்சேரி..  பார்வையிலே சொன்தும்..
" அப்டில்லாம் ஒண்ணுமில்லைங்க... ஷாம்போலாதான் இப்டி கொட்டுது.. "
" ங் அப்டி வாங்ழிக்கு.. ங்ளை வம்புக்கு இழுக்லைன்னா உங்ளுக்கு ூக்மே ராதே.."
"ஆமாமா உங்ளை வம்புக்கு இழுக்சை உங்ளுக்கென்ன... எங்லை இல்மொட்டையாவுது...?ங்ளுக்கென்பாப்பா மாதிரி ந்துட்டு ீப்பா மாதிரில்யிறிங்க.. உங்க்கா பாரு ருப்பு புவைசுதிகிட்டு வெளியிநின்னா சின்ட்டக்ஸ்னு நினைச்சிகிட்டு தண்ணி புடிக்குடம்லாம் எடுதுட்டு ந்துடாறாங்க..."
" அக்கா... கொஞ்சம் கொதிக்கிரணடியை எடுதிட்டு வாயேன்..."
" ீ எஸ்கேப்..." மாமா ஓட்டம் பிடிதார்.
" என்ங்க... நிமாவே சொல்லுங்க... ஆண்ளுக்கு மட்டும் ஏன் ீக்கிமே சொட்டை விழுது...?
" ம்...   பிசாசு மாதிரி இருக்கற பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கிறதாலதான் ..."
"  ஜோக்கு... நான் ரசிக்கிற மூடில இல்ல... சீரியஸா கேட்கிறேன்.. காமராஜர் கல்யாணமே பண்ணிக்கலை அவர் தலை எப்படி வழுக்கையாச்சாம்...?"
"  அறிவு ... நீ வயசான காமராஜர் போட்டோவையே பாட புக்ல பார்த்து பார்த்து முடிவு பண்ணிட்டியா... காமராசருக்கெல்லாம்  வயசாயி வழுக்கை ஆச்சி... ஆனா....
" என்ன ஆனா...நோனா...?"
" ம்.. நாங்கெல்லாம் குழந்தைகளுக்கு அப்பாவா இருக்கும் போதே அப்பப்பாவா இல்ல மாத்தி விட்டுடறிங்க...?"
"சரி... சரி.. ரொம்ப பீல் பண்ணாதீங்க ... நாளைக்கு எதாவது ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்..."
....
" என்னங்க... இங்க பாருங்களேன்... எதோ அமேசான் காட்டில தயாரிக்கறாங்களாம்... கேரண்டியா முடி கொட்டாதாம்... பாட்டிலோட விலை இரண்டாயிரம் ரூபா தாங்க..."
"என்னாது... இரண்டாயிரம் ரூபாயா... காட்டில தயாரிக்கறான்னு இத நம்பி வாங்கி ஆறு மாசம் பூசிகிட்டா நான் ரோட்டில நிக்க வேண்டியதுதான்... போய் உருப்படற வேலைய பாரு..."
" ஆமா துட்டே செலவு ஆக கூடாதே உங்களுக்கு...? இந்துலேகா ஆயில்  கூட பரவாயில்லையாம்  அதையாவது வாங்கி பூசலாமில்ல..."
" ம் அது மட்டுமென்ன நானூறு ரூபா..."
" ஆனாலும் அது கேரளாவில் இரு நூறு ரூபாயாம் ங்க.."
" அதுக்கு கேரளாவுல போய் வாங்கிட்டு வரச்சொல்றியா.. லூசு..இப்படியே பேசி பேசியேதான் எங்க தலை காணாம போகுது... கொஞ்ச நேரம் சைலண்ட்டா இருக்கியா..."
"எப்படியோ தொலைங்க... இப்படியே விட்டா சுத்தம் ஆயிடும்.. அப்பறம் ரோட்ல போற வர்றவன்லாம் உங்களை நிக்க வச்சி தலை சீவிக்குவான்..."
"ஏனாம்.."
"கண்ணாடி மாதிரில்ல மண்டை பள பளக்கும்.."
" எவனாவது சீவிக்கிட்டும்... எனக்கு எண்ணெய்... சீப்பு மிச்சமாகுதுல்ல... போ போய் டிபனை செய்ற வழியை பாரு நீ கூடத்தான் குஷ்பூ ரேஞ்சுக்கு 80 கிலோ போயிட்டிருக்க... நான் என்ன உன்ன திரிஷா மாதிரி ஆவனும்னா சொல்லிட்டிருக்கேன்..?
என்னா சொன்னிங்க....
மானாட மயிலாட ஸ்டார்ட்...
" அப்படி போடு போடு .. " பூரிக்கட்டை நான் எடுக்க மேடையை (வீட்டை)சுற்றி சுற்றி அவர் ஆடிக்கொண்டிருந்தார்.
*********************
திருமணமான ஆண்கள் கவனிக்கவும் என்றவுடனே விழுந்தடிச்சி படிக்க வந்தவங்களுக்கு நன்றி!
கவலையே படாதீங்க... இருக்கவே இருக்கு ஹேர்-பிளாண்ட் போய் நட்டுக்கங்க..! தண்ணியே ஊத்த வேணாம்  பச்சை  பசேல்னு அப்படியே இருக்குமாம்.

(  வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. ஸோ யாரும் கோவிச்சுக்காதீங்க )








Saturday 18 May 2013

இப்படியும் என்ஜாய் பண்ணலாம்....

சம்மரை இப்படியும் என்ஜாய் பண்ணலாம்
* நல்லா வெயிலில் சுத்திட்டு வந்தா மண்டை சுடும்.. அதுல காபி போடலாம் .. ஏன் கொழம்பு கூட வைச்சுக்கலாம்...!

* வெயிலுக்கு பயந்து எல்லாரும் வீட்டுக்குள்ளே  ஃபேனுக்கு  அடியிலே உட்கார்ந்து இருப்பாங்க.. அப்ப உச்சி வெயிலில் ..வெறிச்சோடி போன சாலையில் ஜில்லுனு ஒரு காதல்னு .. காதல் ஜோடிகள் ப்ரீயா சுத்தலாம்....!

* வித விதமா கூலிங் கிளாஸ் தயாரிக்கிற கம்பெனி இந்த முறை சூரியனுக்கே மெகா சைஸ்ல ஒரு கண்ணாடி கண்டுபிடிச்சு .. கின்னஸ் ரெகார்ட் வாங்கலாம்....!

* ஊட்டி.. கொடைக்கானல் இல் இருக்கிற சொந்தகாரங்களை இரண்டு மாசத்துக்கு இங்க குளிர் காய சொல்லிட்டு நீங்க அவங்க வீட்டுக்கு காவலிருக்க போய்டலாம் ...!

* வத்தல்.. வடாம் னு போட்டு டப்பாவுக்குள்ள நிரப்பிக்க இப்ப மட்டும் மாமியாரை பாசமா அழைச்சுகலாம்...!

* ஊர்ல இருந்து வரவங்க கிட்ட .. " நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டி எல்லாம் ... வரும்போது ஸ்வீட், மிக்ஸ்ர்னு .. காசை வேஸ்ட் பண்ணாதிங்க .. வெறும் பழம் மட்டும் வாங்கிட்டு வந்தா போதும் னு சொல்லி ஓசி யில ஜூஸா குடிக்கலாம் ...!

* வீட்டுல ஏ.சி இல்லாதவங்க ஹான்ட் பேக்கை மாட்டிகிட்டு ஏ.சி ஷோரூமா போய் மூணு மணி நேரம் சுத்தி பார்த்துட்டு ஒண்ணுமே வாங்காம கூலா வெளிய வந்துடலாம் ...!

( இது பாக்யா இதழ் ஏப்ரல் 20 -26 ,2012 இல் வெளி வந்தது )
 
 
(   ம்..ம்..  போன வருஷம் சொன்னதுதான்! இருந்தாலும் சமுதாயத்துக்கு சொன்ன நல்ல பல விஷயங்களை அப்பப்ப ரீபிட் பண்ணனுமில்ல....!! கூல் டவுன்...! )
 

Saturday 11 May 2013

வெயில்லயும் கப்பல் விடுவாங்கலாமில்லே.. போவட்டும் விடுங்க..!

இலை நுனி
இசைத்த
மழைத்துளியின்
சங்கீதத்தில்
வீதியை எட்டிப்பார்த்து
உன் விழிகளின் பாவனை..

கட்டவிழ்த்த  சின்ன ஆசையாய்
ஓடும்  நீரில்
நீ விடும் காகித கப்பல்
ஒரு போதும் செல்வதில்லை
என் வீட்டைதாண்டி..

உனக்கு தெரியாது..
என் காதலை நிரப்ப
நான்  
கடத்தி வைத்திருப்பது...!



( கொளுத்தர வெயில்ல இதெல்லாம் ஒரு கவிதை...)
  
 ஹா... ஹா.. கவிஞர்களால் (நான்...?)  வெயில்ல நனையவும், மழையில காயவும்  முடியும்ங்க... அதுக்கு ஏங்க இப்படி திட்டறிங்க?

எப்படியோ போங்க காதலர்கள் கனவிலயாவது மழையில் நனைஞ்சி போறாங்க.... நாம  அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு காய வேண்டியதுதான்...