Friday 15 March 2013

அஞ்சலையின் வேண்டுதல்....!

வெள்ளிக்கிழமை மனுவுக்கு
கவனம் அதிகம் போல

 கூட்டமாய்த்தானிருந்தது
ஏழையோ பணக்காரனோ
எதோ ஒன்றை கேட்டு..

பிரகாரம் முழுக்க மனக்குவியல்கள்..
இலஞ்சம் கொடுத்தே
பழக்கப்பட்டதால்
கடவுளுக்கும் ..

எதிரில்
வேலைக்காரி அஞ்சலை..
சத்தமாகவே கன்னத்தில் போட்டு
“ என் மக எப்படியாவது ப்ளஸ் டூ
பாஸ் பண்ணிப்பிட்டா அபிசேகம்..”
பண்ணிடறேன்..

கல்லாமை அவளோடு போகட்டும்னு
கருத்தா இருக்கா..போல
சினேகமாய் சிரித்து கேட்டேன்..
மேல என்ன படிக்க வைக்கிற..!

ஹாஸ்யத்தை
கேட்டது போல் நகைத்தவள்
மேலயா.. க்கும்.
கவர்மெண்ட்டு
 பணமும், அரை பவுனும்
கல்யாணச் செலவுக்கு
வேண்டிதான் ஹைஸ்கோலு..
அதுக்கு மேல என்னாத்துக்கு?

*************