Thursday 4 April 2013

ஆட்டோகிராப்




ஆனா அப்ப அதான் ஸ்கூலு
யுவராணின்னு ஒரு டீச்சர்..
கவர்மெண்ட் ஸ்கூல்ல
ஃபேனா சுத்தறது.. ரெண்டு பசங்க
ஒருத்தன் வல பக்கம் இன்னொருத்தன்
இடப்பக்கம்.. அட்டைய வச்சி  வீசிகிட்டு..
கரண்ட் போற நாழியெல்லாம் டீச்சர் ஞாபகம்..

கன்னத்தை கிள்ளி
சிட்டி சார் சொல்வார்.. ஏ ஜில்லு..
 நீ பெரியவளாயி கல்யாணம் கட்டிகிட்டு
குழந்தை குட்டியோடு போகும் போது
வழியில பார்த்தா  கிழவன் கிடக்கிறான் போன்னு
வணக்கம் கூட வைக்க மாட்டாய்

விளையாட்டு வினையாச்சி
கண்ணாடி வளை துண்டில
கண்ணுகிட்ட கீறினா பூங்குழலி
சின்ன அடையாளம் அவளை
இன்னும் சொல்லிகிடக்கு


என்ன  திட்டினாலும் ஒட்டிகிட்டிருப்பா லதா..
எப்பவும் எண்ணெய் வழிஞ்ச முகத்தில
கூடவே வழியும் –அன்பு
ஹைஸ்கூல் முடிஞ்சி
ஊர் மாறி போனாள்.. போன ஊர் தெரியல..

டியுஷனில்..
நீயா நானான்னு-
விழுந்து விழுந்து படிப்பான் தாமு..
பேர் சொல்லும் போது
ஷா வராது அவனுக்கு சா என்பான்.

சொப்பு சோறாக்கி
கல்லூரி வரை ஒண்ணாவே திரிஞ்ச மாலு
தேசம் கடந்து..

பரீட்சையில்  நோட்ஸையே எடுத்து தந்த
அந்த ‘ஜொள்’ மாஸ்டர்..

காதலை நான் பார்க்கவில்லை
என்னை பார்த்த அந்த காதலிடம் சொன்னேன்..
காதல் என்சொல்லுக்கே -
முழங்கயித்துல தூக்கு போட்டுக்கொள்ளும் என் குடும்பம்..
மறுப்பது உன் உரிமை.. மறக்க சொல்வதல்ல
 நாகரீகமாய்  சென்ற அந்த’ ஜெண்டில்மேன்… ‘

 என்றாவது ஓர் நாள்
பயணங்களில் பாதைகளில்
பார்க்க நேரிடும்
முகவரி தெரியாத இந்தமுகங்களை-
உலகம் உருண்டை என்பது உண்மையானால்…!