Saturday 21 April 2012


கவிதை
நானும் ... நீயும் ...!
வா.. வா.. மெல்லடா செல்லம் ..
கால் முளைத்த உனக்கு
கை பிடித்து .. நடை பழக்கினேன் ..
சளைக்காமல்..!
காலங்கள் ஓடியதில் ..
கால் தடுமாறும் எனக்கு
உன் தோள் தர அவகாசமில்லை ..
மூன்றாவது காலாய் .. கைத்தடியை
தந்துவிட்டு
பார்த்து போய் தொலை ..
வயசானா.. ஒரு எடமா ..
முடங்க கிடக்கனும் - நீ
சலித்து கொண்டதில் தடியும் கூட தடுக்குது ..! 
மொழி பேசாத -
உன் ஒற்றை வார்த்தைக்காக
காது கொடுத்து
நாளெல்லாம் பேசி பார்த்தேன்..
இந்த கிழத்தோடு கத்த முடியலை ..
செவிட்டு காதும் கூட
உன் நொடிப்பில் வலித்தது..
இது நிலா..அது நட்சத்ரம் ..
திரும்ப திரும்ப சொல்லி தந்தேன் ..
உனக்கு -
இதெல்லாம் தெரியாது
ஆவலோடு எட்டி பார்த்ததும்
அவசரமாய் லேப்- டாப்பை
மூடி கொண்ட பரிகாசத்தில்
முட்டாளாய் தவிக்கிறேன்..!
என் தேவை எதுவுமில்லை
எல்லாமாய்
உனக்கு இருந்தேன்..
உனக்கு
தேவையில்லா மொத்தத்திற்கும்
நானாய் இருக்கிறேன்.. !
 
*********