Sunday 30 June 2013

நீங்க அதிகமா செல்போன் பேசுபவர்களா...? ஹா..ஹா..அப்ப முதல்ல இதை படிங்க...

நான்  சாலைகளில்  நோட்டம் விடுவது செல்போன் பேசாமல் யாராவது தென்படுகிறார்களா...? ம்ஹூம்..ஒருத்தரும்தென்படலை... காதோடு பேசிகிட்டிருந்தவங்களை பார்க்கலாமா...

 கல்யாணமாகாத பொண்ணுங்க ஒரு கையில் காதை பொத்திக்கிட்டு அவங்களுக்கே கேட்காதவாறு பேசிகிட்டு போயிட்டிருக்குங்க...( முன்ன மாதிரி லெட்டரை வச்சிகிட்டு யார் கிட்ட குடுத்து விடறதுன்னு இல்லாம காதலுக்கு டைரக்ட் டீலிங்கான இந்த செல்போன் வாழ்க!)

கல்யாணமாகத பையனுங்க கழுத்தை சாச்சிகிட்டே செல் போன் பேசிகிட்டு டூ வீலர்ல பறந்துகிட்டிருக்காங்க... சமர்த்தா ஹெட்போன்ல பேசிகிட்டே வண்டியில போறவர் கல்யாணமானவராத்தான் இருக்கனும்....

ஆட்டோவோ பஸ்ஸோ ஏறி உட்கார்ந்தவுடனே ஒரு ஸ்டாபிங்க்குக்கே ஹெட்போனை மாட்டி செல்போன்ல பாட்டு கேக்கிற பந்தாஸ் பார்ட்டிங்க ... பக்கத்தில இருக்கிறவங்களை விடற ஒரு லுக்கு இருக்கேசெல்போனை நேத்திக்குதான் கண்டுபுடிச்ச மாதிரியும் இவங்கதான் அதை வச்சிருக்க மாதிரியும்.. .

இஷ்டத்துக்கும் கலந்து கட்டி பேசிகிட்டிருக்கிற இவரு ரியல்-எஸ்டேட் பிஸினஸ் பண்றவராத்தான் இருப்பார்....

வாக்கிங் போய் கிட்டே யார் கிட்டயோ குறை குறையா லிஸ்ட் போட்டுகிட்டே  போற இந்த அம்மா மாமியாராத்தான் இருக்க முடியும்..

யோவ் உன்ன அஞ்சு மணிக்கே மார்க்கெட் போவ சொன்னா என்ன பண்ணினு கீற?”..  கூடையை சுமந்துகிட்டு போற அந்த அக்கா கீரைக்காரியா இருக்கும்...

அட.. ஆட்டோக்காரர் ஒரு கையில் செல்போனை பிடிச்சிகிட்டே ஓட்டிட்டு போறாரே... அதுல உட்கார்ந்து போறவன் நேரம் இன்னிக்கு சரியில்ல...

சர்வ மங்கள மாங்கல்யே...( ஹலோ... ஒரு நிமிஷம்) சிலே ஸர்வார்த்த... ( சரி சரி காலையில் பத்து மணிக்கா) சாதகவே...   -  சாமி என்னன்னு சொல்றது கோயில் குருக்கள் கூட மந்திரத்துக்கு இடையில   சொருகி வச்சிருக்கிற செல்போனை எடுக்கிறாரே..

திடீர்னு குர்ரே முர்ரேன்னு சவுண்டு... திரும்பி பார்த்தா டால்டா டின்னிலிருந்து செல்போனை எடுத்து பேசிகிட்டு போனது... புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க... ஆஹா டமுக்கு டப்பா டிய்யாலோ...

ஒரே ஒரு நல்லவங்க மட்டும்தான் செல்போன்ல பேசாம சுறு சுறுப்பா நடந்துகிட்டிருந்தாங்க... ( வேற யாரு நாந்தேன்..!)

அது சரி நாம பேசாம போனாலும் விடறாங்களா?  ‘காலை 10 லர்ந்து மாலை 6 ஆறு மணிவரைக்கும் ஆபிஸ் டைம்ல  சும்மா கதையடிக்க வேண்டாம்..’ சொல்லி வைப்பேன். ஆனாலும் லஞ்ச் டைம் வரை தாங்க மாட்டாங்க...

கிர்... கிர்... அட வழக்கமா மொக்கை போடற தோழி! ‘மாட்டேன்... எடுக்கவே மாட்டேனே.... ‘

மறுபடியும்  கொஞ்ச நேரத்தில்,

கிர்... கிர்...

ம் ... எங்க அக்கா. அவங்களும் ஆபிஸ்லர்ந்து சும்மாதான் பேசுவாங்க. அப்புறமா பேசிக்கலாம்னு எடுக்காம விட்டா...  

மறுபடியும் இரண்டாவது முறை கிர்...கிர்...

ஹலோ

ஏய் எவ்வளவு நேரமா ரிங் போயிட்டிருக்கு எடுக்காம என்ன பண்றே..?”

ஒரே தூக்கமா இருந்துச்சி அதான் ...”

அதென்ன பகல்ல தூக்கம்? அப்புறம் உடம்பு குண்டாகிடும்...”

அதுக்கென்ன.. நான் ஒல்லியாத்தானே இருக்கேன்... பரவாயில்ல ஏறட்டும்..”

சரி சரி என்ன சாப்பிட்டே?”........ வில் ஆரம்பிச்சிசரி நான் வச்சுடறேன்னு...” முடிக்கும் போது சுமார் இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். கடவுளே ... என் காது..!

இதுல ராங்-கால் கடுப்பு வேற..

ஆபிஸலர்ந்து கிளம்பி ஒரு ஸ்டெப்தான் வைக்கிறேன்... ரிங்-டோன்.. எதோ ஒரு நம்பர்...
ஹலோ

ஹலோ நான் விஜேஷ் பேசறேன்...”

ஹலோ நீங்க ராங்கா நெம்பர் போட்டுட்டிங்க போலிருக்கு.. எனக்கு உங்களை தெரியாது. ..”  கட் பண்ணினேன்

மறுபடியும் அதே நெம்பர்...

ஹலோ நாந்தான் ராங் கால்னு சொல்லிட்டேன் இல்ல அப்புறம் ஏன் மறுபடியும் ..?

எந்த எடம்ங்க?”

ஹலோ நாந்தான் ராங் நெம்பர்னு சொல்லியாச்சே அப்புறம் எந்த எடமா இருந்தா என்ன...? (கடுப்பாக..)

ஹல்லோ..  நான் ஒண்ணும் உங்க பேரை கேட்கலை.. எந்த ஊருதான்னு கேட்டேன்...” (மறு முனை ஹாட்டாக,)

(நான் கூலாகி,) “ இது துபாய் மெயின் ரோடுங்க...”  வைத்து விட்டேன்.

வீட்டிற்கு வந்து கொஞ்சம் அக்கடான்னு... காபியோட உட்காரும் போதே.. ரிங் டோன்... பார்த்தா மறுபடியும் மொக்க தோழி...  ம்ஹூம் போப்பா.. காபியை சுவைக்கிறேன். மறுபடியும் லேண்ட்- லைன் அலற,

ஹலோ... “

ஹலோ என்ன போன் பண்ணா எடுக்க மாட்டியா..?”

இல்ல அதை சைலண்ட்ல வச்சிருந்தேன்... கேட்கலை...”( சும்மா சைலண்ட்டா எடுத்து விட வேண்டியதுதான்...!)

ஆமா.. வெப்பே... வெப்பே... என்ன பண்ணிட்டிருக்க?”

உட்கார்ந்திட்டிருக்கேன்...”

சரி  நைட் என்ன டிபன் ...?”

ம்... வெங்காயம்...( இதுக்கெல்லாமா போன் பண்ணுவாங்க..?)

ஏய் என்ன...”

இல்ல.. வெங்காயம் போட்டு உப்புமா பண்ணலாம்னு இருக்கேன்...”

வர வர உனக்கு கொழுப்பு ஏறிகிட்டே இருக்கு... நீயும் போன் பண்ண மாட்டேங்கிற நான் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிற.. எங்களை ஞாபகம் வச்சிக்கங்க மேடம்...”

ஏய் .. போன்ல பேசினாத்தான் உன்ன நினைக்கிறேன்னு அர்த்தமா? (கஷ்டம்டா சாமி) பக்கத்து தெருவிலதான இருக்கே.. டைம் கிடைக்கிறப்ப வா.. எனக்கு டைம் கிடைக்கும் போது நான் வர்றேன்

ஆனா நம்ம ஆளுங்க இருக்காங்களே நேர்ல பார்க்கும் போது பேச விஷயமே இல்லாதது மாதிரி அப்புறம்... அப்புறம்... ம்பாங்கமறு நாளே போன்ல  பேசுவாங்க பாருங்க... பக்கத்து வீட்டு மாமியிலிருந்து அவங்க வீட்டு மாமியார் வரை வண்டி வண்டியா குறை சொல்லிகிட்டு நான்-ஸ்டாப்பா ஓடும்.. நானும் பதிலுக்கு.. எதையும் காதில் வாங்காம...  கவுண்ட் வச்சிம்... ம்.. ம்...’  ன்னு கூட்டிகிட்டே என் வேலைய பார்த்திட்டிருப்பேன்.

இப்படி ஒரு குரூப்பா இருக்கிறவங்களையெல்லாம்...  நாம அவாய்ட் பண்றோம்..! அத தெரிஞ்சிகிட்ட கில்லாடி குரூப்ஸ் வெவ்வேற நம்பர்லர்ந்து கால் பண்ணி கேட்ச் பண்ணிடுதுங்க... நாம விடுவோமா..? வேற நம்பர் வந்தா எங்க ஆத்துக்கார் கிட்ட தந்து,

ஹலோ நான் ராமசாமி.. நீங்க?”  இப்படி போட்டு அலற வைப்போம். அப்புறம் நேர்ல பார்க்கும் போது குரூப்ஸ், “  

ஹேய்.. நீ நம்பர் மாத்திட்டியாப்பா..?” 

இல்லையே...”

 உன் நம்பர் போட்டா ராமசாமின்னு யாரோ பேசறாங்க...

“  நீ தப்பா போட்டிருப்பே... இப்ப ரிங் குடு.. “

அட இப்ப வருதே... ஒரு வேளை இதே நம்பர் வேற நாட்டில யாருக்காச்சும் இருக்குமோ?

இத எல்லாம் விட பெரிய ஜோக்..  நண்பர் ஒருவர் வெளியிட்ட கவிதை தொகுப்பு நூலில் என் கவிதையோடு முகவரி, போன் நெம்பர் எல்லாம் போட்டு விட.. மாட்டினார் பாருங்க ஒரு கிராமத்து ராஜா..  என் கவிதையை படிச்சிட்டு எனக்கு போன் செய்து, அவங்க ஊர் திருவிழாவுக்கெல்லாம் என்னை கூப்பிட்டார் பாருங்க.. பாவம் ரொம்ப அப்பாவி.. என்னை எதோ பெரிய கவிப்பேரரசு மாதிரி நினைச்சிகிட்டு..  இந்த கொடுமை ஏன்னு.. அந்த நெம்பரை டோண்ட் டேக்ன்னு சேவ் பண்ணி ரிஜக்ட் லிஸ்ட்- போட்டுட்டேன். ஆனாலும் ஒன்பது மாசமா வாரா வாரம் போன் பண்ணிகிட்டே இருக்கார்.. ரிங் போயிட்டே இருக்கு..  ஒரு நாளைக்கு ராமசாமியை பேச வச்சாத்தான் அவர் ஆப் ஆவார் போலிருக்கு..!

அதே தொகுப்பு நூல்ல இருந்து என் நெம்பரை சுட்ட ஒரு வெவகாரமான குரூப்,  எனக்கு போன் பண்ணி, “ மேடம் உங்களுக்கு  ஒரு விருதை பேரை சொல்லி அதை தரலாம்னு இருக்கோம். உங்க கிட்ட அனுமதி கேட்டுக்கிட்டு இன்விடேஷன் போடலாம்னுதான் கால் பண்ணினேன்... அடுத்த மாசம் 15-ம் தேதி தாஜ் கொரமண்டல்ல விழா.. “ என்றார்.

ஆஹா முன்ன பின்ன தெரியாதவன் விருதுன்னா நம்பிடற ஆளா நாம ?அதான் பேர்ல வச்சிருக்கோம்ல உஷாரு...!

விருது வாங்கற அளவுக்கு நாம ஒண்ணும் சாதனை பண்ணிப்பிடலையே ஸார் உங்களுக்கு வேற ஆளா கிடைக்கலையா...”

இல்ல மேடம் .... அந்த நூல்ல வந்திருக்கிற உங்க கவிதை எல்லாம் படிச்சிருக்கிறோம்..”
.........
மேடம் நீங்க ஒரு இரண்டாயிரம் ரூபா சங்க உறுப்பினர் தொகையா கொடுத்த போதும்..”

ஆஹா கொத்தவால் சாவடியில் கூவி கூவி விருது விக்கிற கும்பல்... “ வைங்க சார் போனை விருதும் வாணாம்.. ஒண்ணும் வாணாம்...”

அப்புறம் கவிதை நூலில் டேட்டாவை போட்ட அந்த நண்பரிடம் இந்த மேட்டரை சொல்லி பிடி பிடி என்று பிடித்து கொண்டேன்.

நண்பரோஅந்த குரூப் பொய்யில்லைங்க... நிஜமாவே 20 பேர்கிட்ட 2000 ரூபா வாங்கிட்டு விழா நடத்தி விருது கொடுப்பார். வருஷா வருஷம் இந்த தொழிலை செஞ்சிகிட்டிருக்கார். நான் கஷ்டப்பட்டு செலவு பண்ணி புக் போட்டா அதிலர்ந்து போன் நெம்பரை சுட்டு முதலே வைக்காம சம்பாரிச்சிட்டிருக்கான் அந்த ஆளு..”

விருதுக்கே ஒரு மட்டு மரியாதை போறது இந்த மாதிரி குரூப்பாலதான்..!

சரி மேட்டருக்கு வருவோம்....

பக்கத்து பக்கத்து வீட்டுக்கே கனெக்ட் ஆனது பத்தாம இப்பல்லாம்,

மம்மி...  நான் ஸ்டடி ரூம்ல இருக்கேன்... நீ என்ன பண்றே...?”


நான் ஹால்ல டி.வி பார்த்திட்டிருக்கேண்டா செல்லம்... பசிக்கும் போது கால் பண்ணு.. நான் தோசை சுடறேன்.. .கே வா..?

வீட்டுக்குள்ளயும் இனி யாரும் நேரா பேசிக்க போறதில்ல.

இதை எல்லாம் நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை... செல்போனில் அதிக நேரம் பேசுவது என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பத்திரிக்கைகளில் அடிக்கடி போட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். ‘புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’.. என்ற எச்சரிக்கையை காற்றில் பறக்க விடுவது போல் செல்போன் எச்சரிக்கையையும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் அவசரத்துக்கும், அவசியத்துக்கும் மட்டும் உபயோகிங்க. என்னை சார்ந்த நட்பு, உறவினர் வட்டங்களுக்கு சொல்லியிருக்கிறேன். .. அவசியம் என்றால்தான் உடனே கால் பண்ணலாம்.. மற்ற சமயங்களில் மெசேஜ் அனுப்பலாம் என்று!

அட ஒரு நிமிஷம்... இப்ப ஒரு கால் வருது... மொபைலை ஹால்ல வச்சிட்டிருக்கேன்.. எழுந்து போறதுக்குள் மிஸ்டு கால்...! யாருன்னு பார்த்தா.....” அன்பு”  அட... எங்க ஆத்துக்கார்.

என்னங்க.. நான் இங்கதான இருக்கேன்.. ரொம்பத்தான்...”

இல்ல... ரொம்ப நேரமா ஸிஸ்டம்ல உட்கார்ந்து டைப் பண்ணிட்டிருக்கியே.. அதான் உன்ன  எழுப்பலாம்னு ஒரு ரிங் கொடுத்தேன்....”

கவனம் இருக்கட்டும்...!செல் போனில் அளவா பேசுங்க.. !

( அளவா பேசறதை பத்தி சொல்ல இவ்வளவு அளக்கனுமான்னு மனசுக்குள்ள வாய்ஸ் வர.. “ அட சும்மாயிரு மனசாட்சி.. அப்பத்தான செல்போன்ல அதிக பேசறதும், கேட்கறதும் எவ்வளவு தப்புன்னு புரியும்...)

------------------------
 ஆழமான உணர்வுகளை சொல்லும் இந்த கதையை படித்து விட்டீர்களா?

நண்பன் என்றொரு புத்தகம்....