Tuesday 11 June 2013

மெகா சீரியலுக்கு மகா நன்றிகள்...

 சிறுகதை:                               "அடைக்கலம்"

“ அலமு.. ஒரு டம்ளர்  காபி கொண்டு வா.. “  கதிரேசன் குரல் கொடுத்த அடுத்த  நிமிடத்தில் வேலைக்காரி  சுடச் சுட காபியை வைத்து விட்டு போனாள்.
காபியை குடித்து கொண்டே தினசரிகளில் ஒரு மணி நேரத்தை ஓட்டினார். ஜானகி ஹாலில் டி.வி பார்த்து கொண்டிருந்தாள். 
“ ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வருது திவ்யா…?” சீரியலில் ஒரு பெண் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் . ஜானகி கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்து கொண்டு மீண்டும் அணிந்து கொண்டாள். சீரியல் நாயகி அழுகை முடிந்த பாடில்லை.. ஜானகியும் புடவை தலைப்பில் துடைத்து கொண்டேயிருந்ததை பார்த்ததும் கதிரேசனுக்கு சிரிப்பாய் வந்தது.
 “ ஜானு அவ காசு வாங்கிட்டு அழுதிட்டிருக்கா.. உனக்கெதுக்கு இப்படி காவிரியாட்டம் கண்ல கொட்டிட்டிருக்கு…?”
“ நீங்க பேப்பர் படிச்சிட்டிருக்கறதை நான் எதனாச்சும் சொன்னேனா? நான் டி.வி பார்த்தா உங்களுக்கு  பொறுக்காதே…!”
  ஆமாம் நீ டி.வி பார்க்கறதில எனக்கென்ன பொறாமை.. ?எவ்வளவு நேரம்தான் அழுதிட்டிருப்ப.. வந்து இப்படி உட்கார்ந்தா எதாவது சந்தோஷமா பேசிட்டிருக்கலாமில்ல…”
  வேற வேலை இல்ல..  என்னமோ நேத்திக்குதான் கல்யாண மாதிரி தனியா என்னத்தை பேசிக்க போறோம்.. சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காதீங்க.. ஒரு மணிக்கு நியூஸ் வரும் அப்ப சாப்பிட கூப்பிடறேன் போய் அந்த கம்ப்யூட்டரை  நோண்டிட்டிருங்க…”
கதிரேசன் ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தார்…  அவளை திருமணம் செய்து கொண்ட போது கூட்டு குடும்பம், இரண்டு தங்கைகள்..  தம்பி அவன் அப்பா, அம்மா என்று வீட்டு வேலை மாளாது… அவருடன் தனியாக பேச கூட சந்தர்ப்பம் கிடைக்காமல் தவிப்பாள்..  என்றாவது அவர்கள் இருவர் மட்டும் வெளியில் போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் பிலு பிலுவென்று பிடித்து கொள்வாள்,
“ எப்ப பார்த்தாலும் வேலை.. பிஸினஸ்.. ன்னு வாரத்தில ஒரு நாளாச்சும் என்னை வெளிய தனியா கூட்டிட்டு போகனும்னு தோணுதா?  எனக்கும் ஆசைகள் இருக்கும்னு நினைச்சி பார்க்க மாட்டிங்களா.. உங்க வீட்டுக்கு வேலைக்காரியாதான் கூட்டிட்டு வந்தீங்க  போலிருக்கு…”
  ஜானு.. ப்ளீஸ் புரிஞ்சிக்க..  எனக்கு மட்டுமில்லையா?  தங்கச்சிங்க கல்யாணம் முடியனும்.. தம்பியை படிக்க வச்சி செட்டில் பண்ணனும்.. நாளைக்கு நமக்கு பிறக்க போற குழந்தையின் எதிர்காலத்துக்குமில்ல நான் பார்க்கனும்.. கொஞ்ச நாள் பொறுத்துக்க.. அப்புறம்  ப்ரீயா இருக்கலாம்…”
ஓடி ஓடி சம்பாதித்தாயிற்று.. எல்லா கடமையும் முடிந்து மகனுக்கும் கல்யாணம் முடித்தாகிவிட்டது.  இருவரும்  நிறைய சம்பாத்தியத்தில் இருக்கிறார்கள்.  அழகான பேரக் குழந்தை.  குரல் கொடுத்தால் ஏனென்று கேட்க வேலைக்காரி..  என்ன குறை?   இருந்தாலும் எதோ கதிரேசனுக்கு மனம் வெறுமையாய்த்தான் இருந்தது.
“ ஏன் ஜானு இத்தன வருஷமாதான் எங்கயும் கூட்டிட்டு போகலைன்னு புலம்பிட்டிருந்த.. இனிமே என்ன இருக்கு… அவங்க பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டு வர போறாங்க.. நாம ஊட்டி ப்ளவர் ஷோக்கு போகலாமா…?
“ அட ஆசைய பாரு… சுத்தனும்னு நினைச்சப்ப எல்லாம் முடக்கி வச்சிங்க.. இப்ப பத்தடி நடந்தாவே மூட்டு வலி  இந்த லட்சணத்தில் ஊட்டி மலை ஏறி இறங்கறதாம்.. அதெல்லாம் வயசில அனுபவிச்சிருக்கனும்..  சும்மா நொய்.. நொய்னு பேசிட்டிருக்காம சீரியலை பார்க்க விடறீங்களா..?”
ஒரு காலத்தில் தனியாக பேச துடித்தவள்.. இப்போது  அவர் வாயை திறந்தாலே காதை மூடிக்கொள்கிறாள்.  இந்த பெண்கள் மட்டும் எதோ ஒரு சூழ் நிலையோடு  ஒத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். கதிரேசனால் இந்த வெறுமையை தாங்க முடியவில்லை.
எவ்வளவு நேரம் பேப்பர் படிப்பது, இண்டர்னெட் பார்ப்பது.. மகனும், மருமகளும் வந்தால் மட்டுமென்ன.. ஆளுக்கொரு  லேப்-டாப்பை தூக்கிகொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். குழந்தை கண்ணை செருகி விழும் வரை ஹோம்-ஓர்க்கை எழுதி கொண்டே இருக்கும்.  யாரிடம் பேசுவது..  பெத்த மகனிடமும் அவருக்கான நேரத்தை கேட்க முடியாது.. அவர் அவனிடம் செலவிட்டிருந்தால் தானே அவனும் அதை உணர்ந்திருப்பான். எல்லாருக்கும் தேவை.. பணம்.. பணம்.. அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
“ என்ன  அலமு உம் புருஷன்  குடிக்காம சம்பாதிக்கிறதை ஒழுங்கா குடுக்கிறானா..?” வேலைக்காரியிடம் பேச்சை ஆரம்பித்தால் கூட,
“ அந்தாளு  ஒயுங்கா இருந்தா நான் ஏன் இப்படி  வூடு வூடா அல்லாடறேன்..  நீ கொடுத்து வச்சவரு சாரு.. ஜாலியா காலாட்டிக்கினு உட்கார்ந்துக்கினு துன்னுனு கீற… செரி செரி… உங்கூட பேசிட்டிருந்தா எனக்கு பொழப்பு போயிடும்.. இன்னும் இரண்டு வூடு போவனும்..”  உனக்குத்தான் வேற வேல இல்ல என்பதை சொல்லாம சொல்வது போல் விடு விடு என்று போவாள்.
எதோ ஒரு பாடாவதி தொடர்…  கதிரேசனும் ஜானுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.” ஜானு… இவன் கவிதாவை காதலிக்கிற  பையன் தானே மெக்கானிக் ஷாப்பில் ஏன் வேலை செஞ்சிட்டிருக்கான்…?”
“ அதையேன் கேட்கிறிங்க… பாவம் அந்த பொண்ணு.. இவன் ஓ.சி. காரை எடுத்துகிட்டு போய் பணக்காரன் மாதிரி நடிச்சி அவ பின்னாடி சுத்திட்டிருக்கான்… இவ மாட்டிக்க போறா… ப்ச்..” உச்சு கொட்டினாள்.
“ நீ வேணா  பாரேன்.. அதெல்லாம் மாட்டிக்க மாட்டா.. அதுக்குள்ள பக்கத்து வீட்டு ஆண்ட்டி பார்த்து காப்பாத்திடுவாங்க…”
“ என்னமோ கதைய உங்ககிட்ட சொல்லிட்டு எடுத்த மாதிரி ஓட்டறிங்க…?”
“ நான் என்ன ஓட்டறது பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கும் ஒரு  ஸீனை வச்சாத்தானே … இன்னும் ஒரு வாரம் ஓட்ட முடியும்…?
முறைத்தவள்,  “ இண்ட்ரஸ்ட்டா பார்க்கிறதுன்னா பாருங்க.. இல்லன்னா எழுந்து போங்க… “
“ இது யாரு.. புதுசா இந்த லேடி…?”
“ அது கவிதா இருக்காளே அவளுக்கு………    நான்கு தலைமுறைகளை இழுத்து வைத்து உறவு சொல்லிக்கொண்டிருந்தாள்.
வேறு வழி தோன்றாமல் கதிரேசன் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி தொடரும் போட்டு விட்டு  “ உறவுகள்” – கோ  ஸ்பான்ஸர் பை.. என்று அலறிகொண்டிருந்தது.  
 ******************************************

 இந்த டி.வி சீரியலை பத்தி நாமெல்லாம்  கிண்டலும், கேலியுமா பேசிட்டிருக்கோம்… சீரியல் பார்க்கிறவங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு ஏளனமா சொல்லிட்டிருக்கோம். ஆனா ஒரு விதத்தில் டி.வி சீரியல்தான் இன்னிக்கு உறவிருந்தும் அனாதையாய் தனிமையை உணரும் முதியவர்களிடம் உறவுகளா பேசிட்டிருக்கு என்பதை ஒத்து கொள்ள வேண்டியதாயிருக்கு.  கண் கூடா இதை நிறைய வீடுகள்ல பார்த்திருக்கேன்.
ஒரு வீட்ல வயதான தம்பதி. கணவர் ரிடையரானவர் , மகன், மருமகள் எல்லாம் வெளியூரில். அந்தம்மா  சமையலை முடிச்சிட்டு பத்து மணிக்கு சீரியல்ல உட்கார்ந்தா..  ஒரு மணிக்குத்தான் சாப்பாடு. மறுபடியும் இரண்டு தொடர்.. கொஞ்சம் தூக்கம். பிறகு மாலை ஆறுமணிக்கு தொடங்கினா இரவு பத்து மணி வரை.  அவங்க கணவருக்கோ கொஞ்சம் காது மந்தமாகிவிட்டது.  இவங்க ஒன்றிரண்டு வார்த்தை கூட பேச அலுத்துக்குவாங்க..” ஆமா உங்க கூட கத்தறதுக்குள் போதும் போதும்னு ஆயிடுது.. கம் முனு உட்காருங்க..”  அந்தம்மா கத்தினா அவரு வாயை மூடிகிட்டு பேசாம ஜன்னல் பக்கம்  உட்காருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சி தூங்குவாரு.. மறுபடியும் என்ன பண்றதுன்னு தெரியாம மனைவி கூடவே உட்கார்ந்துகிட்டு  ஊமை படம் மாதிரி சீரியலை பார்த்து கொண்டிருப்பார்.
( எனக்கு ஒரு டவுட்டு… வயசு ஆக ஆக ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் காது கேட்’காது’ போகிறது. ஒருவேளை..  இத்தனை வருஷம்தான் மனைவியை ஆட்டி படைச்சாய்… இனி அவ எது திட்டினாலும் கேட்’காது’ அடங்கி போங்கள்… என்று கடவுள் ஆண்கள்  ஸ்பீக்கர் வால்யூமை  மியூட் ஆக்கி விடுகிறாரோ? ஹா..ஹா.. ஆஹ் ஹா..ஹா! )

இன்னொரு வீட்டில் ஒரு வயதான பெண்மணி மட்டும். அவங்க மகன், மருமகள் இரண்டு பேரும் வேலைக்கு போயிடறாங்க. மருமகள் அலுவலகம் போவதற்குள் மாமியாருக்கு தேவையான காலை , மதிய உணவுகளை டேபிளில் வைத்து விட்டு போய்விடுவாங்க. அவங்க குழந்தையும் ஸ்கூல் போய் விடும். நாள் முழுக்க  அவங்களுக்கு  எந்த வேலையும் கிடையாது. அவ்வளவாக வெளி உலகம் தெரியாது. அக்கம் பக்கம் கொஞ்ச நேரம் யாராவது பேசினால் உண்டு.. மத்த நேரங்களில் என்ன செய்வது ஒரு சீரியல் விடாமல் டி.வி முன் தான்.  இரவு உணவை மட்டும் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசுவது மட்டும்தான் அவர்களுக்கு  மாறுதலா இருக்கும். மத்த நேரங்கள்ல…. ஒரு வேளை இந்த டி.வி சீரியலே இல்லைன்னா..? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்து அவங்களுக்கு அதுவே ஒரு மன நோயா ஆயிடுமில்லையா..?
வயதானவர்களுக்கு  மெகா சீரியல் எதோ ஒரு விதத்தில அடைக்கலமா இருக்கறதை மறுக்க முடியலை.
************