Tuesday 22 October 2013

மகிழ்ச்சியின் எல்லை என்ன...?




 வழக்கமாக பேசும் ஒரு தோழி என்னிடம் விரக்தியாக சொல்லி அங்கலாய்த்து கொண்டிருந்தார்.. “ என்ன ‘லைப்’ப்போ போ... அங்கங்க எப்படி சந்தோஷமா இருக்காங்க .. வித விதமா டிரஸ் பண்ணிகிட்டு ஜாலியா சுத்தறதும்  நினைச்சது வாங்கறதுமா.. என் பாடுதான் இப்படி வீட்டுக்குள்ளயே ஜெயிலாட்டாம் இருக்க வேண்டியதாயிருக்கு ..”



இத்தனைக்கும் அந்த தோழி  நல்ல வசதியான குடும்பம்தான். அவரின் ஒரே மகள் என் மகளுடன் தான் ஒன்றாக பள்ளியில் படிக்கிறாள். அந்த தோழியின் கணவர் நேரமின்மை காரணமாக தோழியை அடிக்கடி வெளியில் அழைத்து போவதில்லையே தவிர மனைவி, குழந்தையுடன் அன்பாக இருக்கிறார்.  அந்த தோழியை பொறுத்தவரை நினைத்த போது புடவை , நகை வாங்குவதும், ஹோட்டலுக்கும் செல்வதும்தான் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்.  நான் சமாதானப்படுத்தினாலும் அந்த தோழி திருப்தி அடைய மாட்டார்.


யோசித்து பார்க்கிறேன் மகிழ்ச்சி என்பதன் அளவீடு என்ன? என் தோழியின் மகளிடம் கேட்கிறேன் “ உனக்கு எதுடா சந்தோஷம் ...?” அதற்கு அவளின் பதில் “ எனக்கு பானி பூரி சாப்பிட்டா ஜாலி..” என்கிறாள்.

 என் மகளை கேட்கிறேன், “  நீ எங்கூட விளையாட வாம்மா .. அதான் எனக்கு ஜாலி என்கிறாள்.

எதிர் வீட்டு பெண்மணியை கேட்கிறேன் , “ என் மகன் டாக்டருக்கு படிக்கனும் அதான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி ... என்றார்.



இப்படியே இன்னும் சில பேரிடம் ....,



தெருவில் கீரை விற்கும் பாட்டி...” இந்த கீரை மொத்தம் வித்தாத்தான் எனக்கு சந்தோஷம்...”



ப்ளஸ் டூ  பையன்...” எனக்கு ஸ்போர்ட்ஸ் பைக்...”


ப்ளஸ் டூ மாணவி...” நான் எல்லா சப்ஜெக்ட்லயும் நிறைய மார்க் எடுக்கனும்...”


காலேஜ் பையன்... பக்கத்து வீட்டு ஸ்ருதி பிக்-அப் ஆச்சுன்னா....


என் அம்மா...” நீங்க எல்லாம் சந்தோஷமா இருந்தாலே அது எனக்கு மகிழ்ச்சி...”


இப்படியே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று... மொபைல் போனிலிருந்து , எல்.இ.டி... கார் வரை சொல்லிட்டே இருந்தாங்க...!


என் கணவரையும் கேட்டேன்...” இருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நாமதான் சந்தோஷமா வச்சிக்கனும்... சந்தோஷம்ங்கிறது நம்ம மனசுலதான் இருக்கு... சந்தோஷப்படறதுக்கு காரணம் தேவையில்லை.. என்ன ஒண்ணு நம்ம சந்தோஷம் அடுத்தவங்களுக்கு துன்பம் தராம பார்த்துக்கனும்...” -  அட என் வீட்டுக்காரர் என்னை மாதிரியே  யோசிக்கிறாரேன்னு.. ஒரு வெரி குட் சொன்னேன்.



யெஸ்...  சந்தோஷத்துக்கான அளவீட்டை ஆராய்ஞ்சிகிட்டிருந்தா அது அடையும் வரை நமக்கு வருத்தம்தான் மிஞ்சும்.  என் தோழி ஹோட்டலுக்கு போற வரை அதை நினைச்சி வருந்திகிட்டிருப்பா... கீரை பாட்டி வியாபாரம் முடியும் வரை கவலைப்பட்டுட்டே இருப்பாங்க.. ப்ளஸ் டூ மாணவி தேர்வு முடிவு வரும் வரை.... காலேஜ் பையன்  காதல் ஓ.கே ஆகும் வரை..


இப்படியே... போய்கொண்டிருக்கும் !


இதுதான் சந்தோஷம் என்று அளவீடு வைத்து கொண்டு அது கிடைக்கும் வரை கவலைப்படலாமா..? அப்படி பார்த்தால் இலக்குகள் மாறி கொண்டே போகும்.. இன்று பைக்.. நாளை... கார்... பிறகு அதற்கும் மேல்... என்று இப்படியே போய் இன்றைய ஒவ்வொரு நிமிஷத்தையும் அல்லவா தொலைத்து கொண்டிருப்போம்? ஸோ.. நம்ம மனசை ஒவ்வொரு நிமிஷமும் மகிழ்ச்சியா நினைக்கலாமில்லையா...  காலையில் பாட்டு பாடிக்கிட்டே பல் துலக்க ஆரம்பிக்கிறதிலிருந்து.... சாப்பிடறது.... வேலைக்கு போறது... தூங்கறது வரை நம்ம மனசை சந்தோஷமா வச்சிக்கறதுல என்ன தப்பு...?    நாம அடைய வேண்டிய இலக்குகள் வேண்டாம்னு நாம் சொல்லலை....   இலக்கை அடையறதுக்காக உழைப்பும், முயற்சியும் இருக்கட்டும்... ஆனா அது மட்டும்தான் சந்தோஷம்னு இந்த நிமிடங்களை தொலைக்க வேண்டாமே..!


யோசிச்சி பார்த்து நம்மையே ஒரு கேள்வி கேட்டுக்கலாம்... நேற்று பொழுதில் நம் முகம் இறுக்கமாக எத்தனை மணி நேரம் இருந்தது... சிரிப்பாக எத்தனை மணி நேரம் இருந்தது  என்று..! எல்லோருமே இரண்டு மூணு முறைக்கு மேல சிரிச்சிருக்க மாட்டோம்ல....?


இல்ல நான் நேத்து முழுக்க முழுக்க முக மலர்ச்சியாவே இருந்தேன்னு யாராவது சொன்னிங்கன்னா.... கை கொடுங்க... நீங்கதான் இந்த கட்டுரையின் ஹீரோ... ஹீரோயின்...!

                                     ---


 எனக்கும் இப்ப மகிழ்ச்சியா இருக்கனும்னு தோணுச்சு... என் பெரியப்பா உறவு அக்காவிற்கு போனை போட்டேன்...


ஹூம்... ரிங் போகலை... அடிக்கடி ஸ்கீம் என்று சொல்லி போன் நெம்பர் மாத்துகிற அக்கா அவங்க..


சரி மாமாவுக்கு போன் போட்டு விசாரிப்பம்னு... “ மாமா அக்கா நெம்பரை மாத்திட்டாளா?  சொல்லுங்க...”


இரு மொபைலை பார்த்து சொல்றேன்...


“ம்... நோட் பண்ணிக்கோ ... “  அவர் சொல்வதற்குள் ஒரு கால் காஸ்ட் காலி...


“ இரு மாமா..பெண்டாட்டி நெம்பரை கேட்டா டக்குன்னு சொல்லுவிங்களா... உங்களை அக்காட்ட மாட்டி விடாம போறதில்ல..”


“ பார்த்தும்மா தாயி... ஏற்கனவே என் தலை மொத்தம் காலி... அடி வாங்கி வைக்கிறதுக்குன்னே மச்சினின்னு வருவீங்களோ?”


பலமா சிரிச்சி பயமுறுத்திட்டு அக்காவுக்கு போனை போட்டேன்,...” ஹேய்.. மாமாவை நீ ஒண்ணுமே கேட்டுக்கறதில்லையா...? உன் நெம்பரை கேட்டா.. “ஹன்சிகா, தன்சிகா நெம்பரை கேட்டா டக்குன்னு சொல்லிடுவேன்... உங்கக்கா நெம்பரை கேட்டா... பார்த்துதான் சொல்லோனும்னு..   அஞ்சு நிமிசம் போன்ல தேடி சொன்னாருக்கா.. நீ என்ன பண்ற  ஈவினிங் அவர் வந்ததும் மண்டையில் கொடுக்கிற அடியில அவரு அலர்ற அலறல் என் போன்ல கேக்கனும்...”


“சொல்லிட்டே இல்ல கவலையை விடு....”



லெட் ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக்...  ஹா... ஹா... !