Sunday 21 July 2013

இந்திய வரலாற்றின் முக்கிய பக்கங்கள்....

என்  முதல் கணிணி அனுபவம்( உலக வரலாற்றில் முக்கிய பக்கங்கள்... ஹா.. ஹா...!)

மதுரை தமிழன் அவர்களே தொடர் பதிவு எழுத என்னை மாட்டி விட்டிட்டிங்களே இது நியாயமா...? இப்ப பூரிக்கட்டைய நான் தூக்கி அமெரிக்கா இருக்கற பக்கமா பார்த்து வீசப்போறேன்...


ஏன்னா ஏற்கனவே பொக்கிஷம் தொடரை எழுதிய வை.கோ சார் தொடர் பதிவிட முடியுமா என்று என்னை மெயிலில் தொடர்பு கொண்டார். நானோ “ இல்லைங்க சார் நான் ரொம்ப நேர  நெருக்கடியில இருக்கேன்... நீங்க வேற மாட்டி விட்டிடாதீங்க”.. என்று பணிவா மறுக்கவும், சரி சரி உங்க வேலைய பாருங்கன்னு பெருந்தன்மையா எடுத்துக்கிட்டாரு...! 

நீங்க என்னடான்னா கேட்காம கொள்ளாம இப்படி போஸ்டர் போட்டு விளம்பர படுத்திட்டிங்களே... சரி சரி என்ன பண்றது... எதோ ஒரு நம்பிக்கையில சொல்லிப்புட்டிங்க... நானும் நட்புக்கு மரியாதை தந்து என் பொன்னான நேரத்தை கண்ணான நேரத்தை செலவு பண்ணி  நான் மொத மொதல்ல கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட மொக்கையான  நினைவுகளை சொல்லி உங்களை திக்கு தெரியாம ஓட வைக்கிறேன்...



என் பிறந்த ஊர் கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர்... அங்கிருந்து காலேஜ்க்கு வேலூருக்கு தினமும் பஸ்ல போய்ட்டு வந்திட்டிருந்தேன்.. அப்ப கம்ப்யூட்டர் க்ளாஸ் படிக்க ஆசையா இருந்தது ...வீட்ல கேட்டப்ப... அதெல்லாம் தனியா அனுப்ப முடியாதுன்னுட்டாங்க.. பெண்ணை பெத்தவங்களுக்கு எப்பவும் பயம்தானே.. ரொம்ப கட்டுபாடான குடும்பம். உடன் படிக்கும் தோழர்களிடம் கூட நான் பேசியதில்லை. கல்லூரி முடித்ததும் திருமணம். சுதந்திரமா நான் வெளியில் வந்ததே என் திருமணத்திற்கு அப்புறம்தான். எனக்கு பிடிச்ச தழிழை அஞ்சல்வழியில் முதுகலை முடித்ததும் கல்யாணத்துக்கப்புறம்தான்! 

கல்யாணமான ஒரு வருடத்தில் பெண்குழந்தை.. மாமியார் எதையாவது  குறை சொல்லி கொண்டே இருப்பார்கள்... என் கணவர் என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான் கம்ப்யூட்டர் க்ளாஸ் அனுப்பினார். நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போனது ஆறு மாத கோர்ஸ்தான். 2 0 0 --  ல்தான்( நீங்க ஸ்டார் போட்டா நான்க கோடு போடுவோம்ல...!) நான் ஒரு கம்ப்யூட்டர் செண்டர்ல சேர்ந்தேன். என் குழந்தைய விட்டுட்டு எதிர் வீட்டுல இருந்த கல்யாணமாகாத ஒரு +2 படிக்கிற பெண்ணையும் துணைக்கு சேர்த்துக்கிட்டு க்ளாஸ் போக ஆரம்பிச்சேன்.

க்ளாஸ்ல  எல்லாரும் கல்யாணமாகாத பசங்க.. சொல்லி கொடுத்த மாஸ்டர் ரெண்டு பேரும் சக சின்ன வயசுக்காரங்க.  என்னையும் கல்யாணமாகதவன்னு நினைச்சிட்டாங்க.. தியரி எடுக்கும் போதெல்லாம் மாஸ்டர் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கிட்டே இருக்காரு...  கூட வந்த பொண்ணு “ க்கா ஸார் உங்களை கல்யாணமாகலைன்னு நினைச்சி சைட் அடிக்கிறார் .. இருங்க நான் பேச்சு மேல சொல்லிடறேன்னு “ஸார் இவங்க பாப்பான்னு ஒரு நாள் சொல்ல...” மாஸ்டரோ “ என்னது உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா?.. என்று கேட்டு முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 பிறகு நார்மலாக பேச ஆரம்பித்துவிட்டார். மிகவும் அமைதியான அவர் தந்தையில்லாமல் கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு வந்ததை சொன்னார். யாரையும் கல கலப்பாக்கி விடுவது என் இயல்பு.  நான் வந்தாலே சிரிக்க வைத்துவிடுவேன். என் நகைச்சுவை குறும்புகளை மிகவும் ரசிப்பார். நானும் அந்த பெண்ணும் சைலண்ட்டா இருக்கற மாதிரி இருந்து குறும்பு பண்ணி மத்தவங்களை சிரிக்க வைப்போம். என்னை எதாவது நோட்ஸ் எழுத சொன்னால் நோட்டை அவரிடமே கொடுத்து நீங்களே எழுதி வைக்கனும்னு சொல்லிட்டு போய்விடுவேன்... பாவம் அவரும் எழுதி வைத்துவிடுவார். க்ளாஸ் முடிஞ்சி போறப்ப மாஸ்டரோட செருப்பை அந்த பக்கம் ஒண்ணு இந்த பக்கம் ஒண்ணுன்னு ஒளிச்சு போட்டுட்டு போய்விடுவோம்.

இப்படியே கலாட்டாவா போய்கிட்டிருந்தப்ப மாஸ்டர் என்னை ஒரு நாள் அழ வைச்சிட்டார். ஒரு நாள் அவர் ஆபிஸ் ரூம்ல வைத்திருந்த குடி தண்ணீர் பாட்டில்ல இருக்கற தண்ணீரை அவரை கேட்காமயே எடுத்து குடிச்சிட்டேன். அங்கு வந்த மாஸ்டர் “ என்னது அந்த தண்ணியை குடிச்சிட்டிங்களா?” கண்களில் அதிர்ச்சி காட்டினார்.

“ ஆமா குடிச்சேன்.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா மினரல் வாட்டர்.. இங்க ட்ரம்ல கண்ட தண்ணியை வச்சிருக்கிங்க... அதான் உங்க பாட்டிலை எடுத்துகிட்டேன்..”  ஹா.. ஹா.. சிரித்தேன்.

“ அய்யய்யோ.... அதில் கரப்பான் பூச்சி மருந்து கலந்து வச்சிருந்தேன்.. இங்க ஒரே பூச்சி தொல்லை ஜாஸ்தியாயிருந்ததுன்னு  ஸ்பேரே பண்ணனும்னு வச்சிருந்தேன்...  வீட்டுக்கு போறதுக்குள்ள மயக்கம் வந்து வாயில நுரை தள்ளிடுமே என்ன பண்றது..? ஒரு வார்த்தை கேட்டுட்டு குடிக்க கூடாதா? “  படபடப்புடன் அதிர்ச்சியோடவே கூறி கொண்டிருந்தார்.

“ என்ன சார் இது இப்படி பயமுறுத்திறிங்க... மருந்து கலந்ததை இப்படியா அஸால்ட்டா வைப்பிங்க? இம்மியடியட்டா ஆஸ்பிட்டலுக்கு போகட்டுமா.. என் கணவருக்கு போன் பண்ணட்டுமா என்றேன்...கலவரத்துடன்.

“ இருங்க... நான் ஆன்டிபயாடிக் மாத்திரை வச்சிருக்கேன்... விஷத்தை உடனே முறிக்கும். முதல்ல அதை போட்டுக்கங்க... மாடிக்கு ஓடி அறையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வந்து தந்தார்..

ஒண்ணும் ஆகாதே சார்?

சத்தியமா ஒண்ணும் ஆகாது குடிங்க...

சத்தியத்தை நம்பி அந்த மாத்திரையை வாயில் போட்டு விழுங்கிவிட்டேன்.

இப்போது மாஸ்டர்  ஹா ஹான்னு சிரிக்கிறார். “ நான் பூச்சி மருந்து கலந்திருக்குன்னு சொன்னதெல்லாம் பொய்.. அது ஒரிஜனல் மினரல் வாட்டர்தான்.. இப்ப கொடுத்தேன் பாருங்க மாத்திரை அது பேதி மாத்திரை.. எப்படியும் வீட்டுக்கு போறதுக்குள்ள கலக்கிரும்.. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க..! ன்னு நக்கலா சிரிக்கறாரு...

எனக்கு அழுகை வரும் போல் ஆகிவிட்டது... இருங்க எங்க வீட்டுக்காரர் கிட்டயே சொல்றேன்.. விளையாடறதுக்கு கூட அளவு வேணா.. எதாவது ஆச்சின்னா நீங்கதான்னு.. கிளம்பினோம்.

வழியெல்லாம் “ ஈசு நிசமாவே நிறையமுறை கலக்கி குளுக்கோஸ் எல்லாம் ஏத்தற மாதிரி நிலமை ஆயிடுமா...?” பயந்துகிட்டே கேட்டேன்.

அவளோ, “ க்கா சார் ரொம்ப நல்லவர்.. சும்மா கலாட்டா பண்றாருன்னு நினைக்கிறேன்... இல்லைன்னா அவ்வளவு தைரியமா இருக்கமாட்டாரு.. ஒண்ணும் ஆகாது வாங்க என்றாள்...”

வீட்டிற்கு போய் ஒரு மணி நேரம் வரை அதே திகிலுடன் இருந்தேன்... எப்படியும் ஒரு முறை அவரிடம் கேட்டுவிட்டு என் கணவரிடம் போட்டு கொடுத்துவிடலாம் என்று அவருக்கு போன் செய்தேன், “ ஏன் இப்படி பண்ணிங்க? ஒண்ணும் ஆகாதில்ல சொல்லுங்க நான் ஆஸ்பிட்டலுக்காவது போகனும்..!”

“ அட ஒரு மணி நேரமா இதையேவா நினைச்சிட்டிருக்கிங்க... ஹா.. ஹா.. நீங்க குடிச்சது வெறும் விட்டமின் மாத்திரைதான். சாமி சத்தியமா அது விட்டமின் மாத்திரைதான்... சும்மா வாலுத்தனம் பண்றிங்கல்ல அதான் கொஞ்சம் கலாட்டா பண்ணேன்.  ஹா.. ஹா.. “ என்றார்

மறு நாள் அவரை மொறைச்சதுல ஸாரி.. ஸாரி.. ஜஸ்ட் பார் ஃபன் என்றார்.

கோர்ஸ் முடியும் போது அந்த மாஸ்டரும் வேலை கிடைத்து வெளியூருக்கு சென்றார்.. எங்க வீட்டிற்கு வந்து காபி குடித்து விட்டு மறக்க முடியாத நிகழ்வுகள் இந்த க்ளாஸ்னு நெகிழ்ச்சியா பேசி ஆட்டோகிராப் போட்டு கொடுத்துட்டு போனார்.

அதுக்கு பிறகு அவர் எங்க இருக்காரோ தெரியாது. எப்போதுமே மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து பார்த்தால் எல்லோருக்குமே சந்தோஷமாத்தான் இருக்கும்.

அது சரி.. அப்ப கம்ப்யூட்டர் க்ளாஸ்ல உருப்படியா ஒண்ணுமே கத்துக்கலையான்னு கேட்காதிங்க. இப்படித்தான் நான் படிச்சா கூட ஜோக்கா படிப்பேன். அதனால முதல் கணிணி அனுபவம் விளையாட்டா   நகைச்சுவையாத்தான் இருந்தது.

அப்படி கத்துக்கிட்ட கணிணியால இன்னிக்கு ஒரு concern -ல் அக்கவுண்ட் செக்ஷனில் 'டேலி' பண்ணிட்டிருக்கேன். 
எங்க வீட்ல இருப்பது என் கணவர் B.Sc  computer science படிக்கும் போது வாங்கின desktop  கம்ப்யூட்டர்தான். அதிலயே அவர் MCA வும் முடிச்சார். லேப்-டாப்புக்கெல்லாம் இப்போதைக்கு தேவை இல்லை.  இனி  என் மகள் மேல் வகுப்புக்கு போகும் போதுதான் வாங்கனும். அதுவரை எங்க வீட்ல தூசு படிஞ்சிருக்கிற கம்ப்யூட்டரை யூஸ் பண்ணாலே போதும்னு நினைக்கிறேன் நான்.  

ப்ளாக் ஆரம்பிக்கனும்னு நினைப்பு வந்ததே பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளை வெளியிடத்தான். நானா how to create free blog? ன்னு கூகுள்ள தேடி ப்ளாக் தொடங்கி நூறு பதிவுக்கு போட்டுட்டேன். ஆனா யாரும் படிச்ச மாதிரி தெரியலை

அப்பத்தான் டி.என் முரளிதரன் அவர்கள் வலைப்பக்கம் எதேச்சையா கண்ல பட்டது. பார்த்தா followers, comments இருந்தது.  சரி நம்ம சந்தேகங்களை கேட்டுருவோம்னு என்னை அறிமுகபடுத்திகிட்டு அவருக்கு மெயில் அனுப்பினேன். அப்புறம் சகோதரர் முரளிதரன் எனக்கு தமிழ் மணம் பற்றி சொல்லி என் பக்கத்தில் அழகான வேலூர் கோட்டையை வடிவமைத்து தமிழ் மணத்திலும் இணைத்து தந்தார். நிறைய ப்ளாக் பற்றி சொல்லி தந்தது அவர்தான். குறுகிய காலத்தில் தமிழ் மண ரேங்க் 20, 21 என்றும் வந்துவிட்டது. புகழுக்காக நான் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இந்த அங்கீகாரத்திற்கு நான் முரளிதரன் சாருக்கு ரொம்ப நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.

தமிழ் மணம் இது பற்றியெல்லாம் தெரியாதப்ப எதேச்சையா என் கண்ல பட்டது ரெண்டே ரெண்டு வலைப்பக்கங்கள்தான். அது “முரளிதரன் சார் வலைப்பக்கமும், “அவர்கள் உண்மை” பக்கமும். எழுத்துன்னா இத்தனை நேர்த்தியா இருக்கனும், நாகரீகம் மீறாம இருக்கனும்னு அற்புதமா எழுதிகிட்டிருக்கும் முரளிதரன் சார் வலைப்பக்கத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

அதே போல் இத்தனை நையாண்டி , நக்கலா... ஆஹா படிக்க ரொம்ப நகைச்சுவையா இருக்கேன்னு ( சில சமயம் ஒன்றிரண்டு முகம் சுளிக்கவும் வைக்கும்தான் அதை ரிஜக்ட்டு பண்ணலாம்) அப்பப்ப ஆபிஸ் டைம்ல நைஸா படிச்சது” அவர்கள் உண்மை “பக்கத்தை. கடைசியில்  மதுரை தமிழன் என்னை மாட்டிவிடுவார்னு தெரியாம போச்சு அப்ப.

அப்புறம் எனக்கு நிறைய பூஸ்ட் வார்த்தைகளை தந்த பாலகணேஷ்...ஸார்  கமெண்ட்டா அள்ளி தந்து உற்சாகப்படுத்தும் வை.கோ சார் இவர்களுக்கும் என் ப்ளாக் பயணத்தில் முக்கிய பங்குண்டு.  ரமணி சாரும் , தனபால் சாரும் முதல்ல வந்து பாராட்டி கருத்து போட்டுருவாங்க. ஜெயதேவ், வருண், கவியாழி சார் இப்படி நிறைய பேருக்கு நான் நன்றி சொல்லனும்.  இந்த அழகான பயணங்களில் கல கலப்பாக்கும் அத்தனை பேருக்கும் நன்றி!

மறுபடியும் இந்த தொடர் பதிவை தொடர யாரையாவது சிக்கவைக்கனும்னு மதுரை தமிழன் சொல்லிட்டதால....

நாட்டுக்கு வெளியே இருப்பதால் ஓடி வந்தெல்லாம் உதைக்க மாட்டாங்கன்னு  தைரியமா...

அருணா செல்வம்...

வருண்....

ஜெயதேவ்...


கருத்து போட்டு சிக்கிய

 நிரஞ்சன்

சே.குமார்

 உங்களை

இந்த தொடரை மொக்கையாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

.. எங்கே மதுரை தமிழன் அவர்களை ஆளைக்காணும்...?