Tuesday, 15 April 2014

“ நினைவில் சில கனவுகள்....! “



                                         
                                              

சம்பங்கி பூவின் வாசம் கும்மென்று வீட்டை ரம்மியமாக்கியது.. கொஞ்சம் தொடுத்து பூஜைக்கு வைக்கலாம் என்று பால்கனியிலிருந்து பறிக்க போன போதுதான் அந்த காட்சியை பார்த்தேன். நெடு  நெடுவென்று மரம் போல் அடர்ந்து வளர்ந்த கொடிகளுக்கிடையில் அந்த இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டிக்கொண்டிருந்ததை... மெல்ல சத்தம் போடாமல் ஒதுங்கி கவனிக்கலானேன்... அந்த குருவிகள் கணவன், மனைவியாக இருக்க கூடும்... ஆண் குருவி ஒரு குச்சியை வைக்க.. பெண் குருவி தேங்காய் நார் போன்றதை வைக்க இரண்டும் மாறி மாறி எதை எதையோ நிரப்பி ஒரு கூட்டை உருவாக்கி கொண்டிருந்தது... இலட்ச கணக்கில் செலவு செய்து  நாங்கள் இருக்கும் வீட்டை கட்டும் போது இருந்த சந்தோஷத்தை விட  இந்த இயற்கையின் படைப்பை பார்க்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகவே உணர்ந்தேன்...
      
அப்போதிலிருந்து அந்த கூட்டை கண்ணும் கருத்துமாய் கவனிப்பதே எனக்கு வேலையாயிருந்தது.. என் வீட்டு வாலு ‘ சஞ்சய்’ க்கு தெரிந்தால் அவ்வளவுதான்... பிரித்து மேய்ந்து விடுவான்.. ஹனிஷாவை மட்டும் கூப்பிட்டு காண்பித்தேன்..” ஹனும்மா.. இங்க பாரேன் குருவி வீடு கட்டியிருக்கு...தம்பிகிட்ட சொல்லாம நீ மட்டும் பத்திரமா பார்க்கனும்..”

“ எதுக்கு மம்மி... இப்படி கட்டியிருக்கு?”
“ அந்த கூட்டுக்குள்ளதான் குட்டிக்குருவி வளரும்..”
“குட்டி  குருவி எப்படிம்மா இருக்கும்?”
மெல்ல கூட்டை எட்டிப்பார்த்தேன்... அம்மா அப்பா குருவிகள் இரைக்கு போயிருந்தது.. உள்ளே இரண்டு முட்டைகள் பத்திரமாய் தாயின் வயிற்றில் இருப்பதை போல.. மெல்ல மொபைலில் படம் எடுத்து,

“ ஹனும்மா... இந்த முட்டைக்குள்ளதான் குட்டிக்குருவிங்க இருக்கும்டா... அது கொஞ்சம் பெரிசானா இந்த ஓட்டை ஒடைச்சி வெளிய வந்துடும் அப்புறம் உன்ன மாதிரியே அதுவும் வளரும்...”

“ மம்மி நான்  உன் வயித்திலதானே வளர்ந்தேன்னு சொன்னே...  நான் கூட இப்படிதான் உன் வயித்தை கிழிச்சி வெளில வந்தேனா...ஒனக்கு வலிச்சதா?” ஹனி அப்பாவியாய் கேட்கவும் குழந்தைகளுக்கும் சிறகை விரிக்கும் அந்த பறவைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை...

“ சரிடா செல்லம்... குட்டிகுருவி வெளியில் வர்ற வரை நாம அப்பப்ப வந்து பார்த்தா அதோட அப்பா அம்மா வேறு இடத்துக்கு வீட்டை எடுத்துட்டு போய்டும். தெரியாமத்தான் பார்க்கணும்..”

“ சுஜி வர வர என்னை கவனிக்கிறதே இல்லே.. இந்த கூடு வந்ததிலிருந்து  அதுங்களோடவே உனக்கு சினேகமா போச்சு...” சரவணன் செல்லமாய் சிணுங்கினாலும் அவனும் அந்த கூட்டின் ரசிகனாய் மாறிப்போனான். அலுவலகம் விட்டு வந்ததும் அவனும் அவற்றை கொஞ்ச நேரம் பார்த்து விட்டுதான்  காபி குடிக்க உட்காருவான்.

       ஒரு நாள் மெல்லிய கீச்.. கீச்..கிறீச் என்று சத்தம் கேட்கவே... சஞ்சய்க்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது.. “ மம்மி என்னை தூக்கி காண்பியேன்...” அடம்பிடிக்க தொடங்கிவிட்டான்.
      
 “சஞ்சய்.. இதுக ஒன் தம்பி, தங்க மாதிரி... கல் எடுத்து அடிக்க கூடாது... குச்சி எல்லாம் எடுத்து நோண்டக்கூடாது.. பெரிசா வளர்ந்தாத்தான் உங்கூட வெளையாடும்... ஓகேவா?

“ ஓகே மம்மி... தொடாம பார்த்துக்கேன்...”

தினம் அந்த அப்பா அம்மா குருவிகள் இரண்டும் இரை தேடி வந்து குட்டிகளுக்கு  மூக்கால்  கொத்தி எடுத்து ஊட்டி விடும் ....அவைகளும் சின்னதாய் வாய் திறந்து தின்னும்.. இந்த உன்னதமான அன்பின் பிணைப்பை பார்க்கும் போது எனக்கு பசி கூட மறந்து போய்விடும்.

பக்கத்து காம்பவுண்டில் எட்டிப்பார்த்து, “ மாலாக்கா... இங்க பாருங்களேன் இந்த இரண்டு குருவிங்க என்ன அழகா ஊட்டி விடறதை... சீக்கிரம் வாங்க...” கையை ஆட்டி உற்சாகமாய் கூப்பிட,

மாலாக்கா எந்த சொரணையுமில்லாமல், “ சுஜி இது போய் என்ன அதிசயம் இப்படி பாத்துட்டிருக்க... இப்பதான் பருப்பு வேக போட்டிருக்கேன்.. நிறைய வேலையிலிருக்கு..” கூட்டை எட்டி கூட பார்க்க அவகாசமில்லாமல் உள்ளே போனாள்.

சே... என்ன மனுஷி இவள்... பார்க்கலைன்னாலும் அப்புறம் வர்றேன்னாவது சொல்ல தெரியுதா... இப்படி எல்லா ரசனைகளையும் மூட்டை கட்டி சம்பாதிக்கிறதும், சாப்புடறதுமாத்தான் நிறைய பேர் வாழ்க்கை போய்ட்டிருக்கு...

ஒரு நாள் என்ன ஆச்சோ தெரியலை ரொம்ப நேரமா அப்பா அம்மா குருவிகளை காணோம்.. குட்டிக  ரெண்டும் கீச்.. கீச் ன்னு கத்தி பசிக்கு ரகளை பண்ணிக்கிட்டிருந்தது... குட்டிக்கு சாதப்பருக்கை போட்டுத்தான் பார்ப்போமேன்னு... கொஞ்சம் கிண்ணத்தில் வைத்து கொண்டு ஒன்றிரண்டு பருக்கைகளாக அதுக்கு ஊட்டி விட கொத்தி தின்றது....” ஐய்யா... குட்டி குருவி பூவா திங்குது...” சஞ்சய் க்ளாப்ஸ் பண்ணிக்கொண்டு எதிர்த்த வீட்டு சோனுவிடம் சொல்ல ஓடினான்.

       எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ பொழுது போய் வந்து சேர்ந்த அப்பா, அம்மா அதன் மொழியில் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருந்தது. அதிலிருந்து கொஞ்சம் தானியங்களை பால்கணியில் பரத்தி வைக்க தொடங்கினேன்... பெரிய குருவிகள் அதை கொத்தி குட்டிகளுக்கு போடுவதை தினசரி வழக்கமாக்கி கொண்டது.

        நாங்க நாலுபேரும் இந்த கூட்டோட சொந்தம் கொண்டாடி வந்தோம். சரவணன் குட்டிங்க ரெண்டுத்துக்கும் மனிஷா, சீயான்னு பேர் வச்சி  கொஞ்ச ஆரம்பிச்சிட்டான்.  “ நான் வர்றதுக்குள்ள என்ன தூக்கம் ஒங்களுக்கு? கீச்... கீச்... பறவைகள் மொழியிலேயே ஹாய் சொல்லுவான்.. சத்தம் கேட்டதும் அதுகளும் கீச்...கீச்... கிறீச்... பதில் கொடுக்கும்.

கொஞ்ச நாளில் குட்டிக்குருவிகள் தத்தி தத்தி கூட்டுக்கள் அடி எடுத்து வைக்க தொடங்கியது.. பெரிய குருவிங்க ரெண்டும் அதுக்கு ரெக்கை விரிச்சி பறக்க சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய குருவிகள் வெளியில் போயிருந்த போது குட்டிங்க பறக்க முயற்சி செஞ்சி கீழே விழுந்து விட்டது... பதட்டத்தில் எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை.. சரவணன் தான் ஒரு டர்க்கி டவலில் கையை சுற்றிக்கொண்டு ஒரு பூவை சுமப்பது போல் மெல்ல அந்த குட்டிகளை தாங்கி அதன் கூட்டில் வைத்தான். “ தேங்க் யூ சரா.. யூ ஆர் வெரி க்ரேட்...!”  அவன் கன்னத்தில் இதமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

       இப்போது குட்டிகள் கொஞ்சம் பறக்க தெரிந்து கொண்டது..  கொஞ்சம் மேலே சிறகடித்து உட்காருவதும் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாய் இருந்தது.  தினசரி சஞ்சய் சோனுவை அழைத்து வந்து குட்டி குருவிகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

        நாங்கள் அன்றும் வழக்கம் போல் காலையில் குட்மார்னிங் சொல்ல  கூட்டருகே வந்து “ மனிஷா, சீயான் .. கீச்... கீச்...”

பதிலுக்கு எந்த சப்தமுமில்லை... மறுபடியும் க்கீச்..கீச் என்று சொல்லிக்கொண்டு  அதன் வீட்டை எட்டிப்பார்த்தோம்.. குட்டிகள் இல்லை... பறக்க தெரிந்ததும் அதன் அப்பா அம்மா அழைத்து சென்று விட்டிருக்கிறது. இனி அவைகளோடு விளையாட முடியாது கண்களில் நீர் கோர்த்தது... கொஞ்ச நாட்களாய் எங்களுடன் வசித்த ஜீவன் கள் எங்களை விட்டு பிரிந்துவிட்டது.

“ டாடி எனக்கு சீயான் வேணும்... போய் அதுங்களை கூட்டிட்டு வாங்க...”  சஞ்சய் மண்ணில் புரண்டு அடம் பிடித்து கொண்டிருந்தான்.
“ மம்மி இனி வராதா?” மனிஷா ஏக்கமாய் என்னை பார்த்தாள்.

  மனுஷங்ககிட்ட இருந்தா வாழவிடமாட்டாங்கன்னு வேறு உலகம் தேடி போயிடுச்சு போலிருக்கு... வெய்ய காலம் தொடங்கிடுச்சு... வழக்கமா அந்த கொடியோட கிளைகளை வெட்டி சீர் பண்ணி தண்ணி ஊற்றுவோம்... அப்பதான் புதுசா கிளைக்கும்... இந்த முறை கொடியை வெட்ட மனசு வரலை.. அந்த குருவிங்க கூடு அப்படியே இருக்கனும். அதுங்க கஷ்டப்பட்ட கட்டிய வீட்டை இடிக்க முடியாது. என்னிக்காச்சும் ஒரு நா அது வீட்டை பார்க்க வருமான்னு யோசனை பண்ணிக்கிட்டே தூரத்துல அண்ணாந்து பார்க்கிறேன்... கண்ணுக்கெட்டின தூரம் வரை செல் போன் டவர்தான்..!

Saturday, 22 March 2014

படையல்....

காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம்  வந்து ஒட்டிக்கொள்ளும்...  போனை எடுக்க பயந்து ‘ நீங்களே பேசுங்க “... கணவரிடம் தந்தேன்.

காதில் வைத்த அவர், “ ஓ.. சாரி.. அப்படிங்களா எப்ப என்ன ஆச்சு எத்தனை மணிக்குண்ணா..?” என்று கேட்கும் போதே எதோ ஒரு துக்க செய்திதான் என்று புரிந்து பதட்டமாகிவிட்டது.

“ சுஜி  உங்க சித்தப்பா போய்ட்டாராம்டி.... ஈவ்னிங் அஞ்சு மணிக்கு எடுப்பாங்களாம்.. நீ சீக்கிரம் கிளம்பிடு... நான் ஆபிஸ் போய்ட்டு கொஞ்சம் வொர்க் இருக்கு அது முடிச்சிட்டு ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்...”

சித்தப்பாவிற்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட்-அட்டாக் வந்திருக்கிறது.. இந்த முறை காப்பாற்ற முடியவில்லை... சித்தப்பா எப்படி போய்ட்டாருன்னு நம்ப முடியலை... சித்தப்பாவை மாதிரி சுறு சுறுப்பான ஆளை பார்க்கவே முடியாது... எல்லா விசேஷத்துக்கும் அவர்தான் முன்ன நிப்பார்... ஒரு குரல் கொடுத்தாரானால் எட்டூருக்கு கேக்கும்... கல்யாண விசேஷத்துல பொண்ணு ரூம்ல மேக்கப் பண்ணிக்கிட்டு லேசுல மேடைக்கு கிளம்பமாட்டாங்க... சித்தப்பா வந்தாருன்னா ஒரே கூச்சல்...” ஏம்மா எவ்வளவு நேரம் தான் மேக்கப் பண்ணுவீங்க... எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க... சட்டு புட்டுன்னு புடவைய மாத்தி மேடைக்கு அழைச்சிட்டு வாங்க... முகூர்த்த நேரம் போய்க்கிட்டே இருக்கு... இப்ப வர்றீங்களா இல்லையா..?”  இரண்டு மூணு தரம் சத்தம் போடுவார்... அவ்வளவுதான் கல்யாண பொண்ணை சிங்காரிக்கிற கூட்டம் மாட்டை ஹோய்.. ஹோய்...னு ஓட்டினா வேகமா ஓடுமே அதுமாதிரி வேக வேகமா டிரஸ் பண்ணி விடுவாங்க...

        “ இப்படி ஒரு சித்தப்பா இல்லைன்னால இவளுங்க லேசுல நகர மாட்டாளுங்க...”  அத்தை முணுகுவாங்க.

தாலிகட்டி சாப்பாடு முடிந்து பொண்ணை பேக் பண்ற வரை சித்தப்பா பம்பரமா சாட்டை எடுத்து ஓட்டாத குறையா வேலை வாங்குவார்.. எல்லா விசேஷமும் அதது நேரத்துக்கு சரியா முடிஞ்சிடும். எல்லாரும் பெருமையா பேசுவாங்க சித்தப்பா இல்லைன்னா இவ்வளவு சரியா வேலை முடிஞ்சிருக்காது...

விசேஷம் மட்டுமில்லை இறப்பு வீடுகளுக்கு சென்றாலும் அங்கு சித்தப்பாதான் ‘ இதை செய்.. அதை செய்..’ என்று வழிமுறைகள் சொல்லிட்டிருபாரு.... “ தேவாரம் படிக்கிறச்சே யாரும் அழக்கூடாது... சித்த நேரம் அமைதியா இருங்கோ...” கூட்டம் அமைதியாகிவிடும்.

இப்போது சித்தப்பா அவசரமில்லாமல் கண்ணாடிபெட்டிக்குள் உறங்கி கொண்டிருந்தார்.  “ வாடிக்கண்ணு.... சித்தப்பா போய்ட்டாரும்மா... “ சித்தி கையை பிடித்து கொண்டு அழுதாள்.
 நான் சிறிது நேரம் சித்தப்பாவையே பார்த்து கொண்டிருந்தேன்.. “ யாருப்பா எங்களையெல்லாம் இனி வழி நடத்துறது?”  எனக்கு  அழுகையை வெளிப்படுத்த தெரியாது... மனதுக்குள் உணர்வுகளை தேக்கி கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.. யார் யாரோ வந்து திடீர் திடீரென்று பாட்டு பாடி சித்தியை கட்டிக்கொண்டு அவரின் அழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. அப்படி அழ வைத்து விட்டு புடவை தலைப்பால் கண்ணையும், மூக்கையும் துடைத்து கொண்டு பின் பக்கம் உட்கார்ந்து , “ ஏண்டி மல்லிகா அவங்க பேத்தி, பொண்ணுங்கன்னு ஒண்ணாவது வாயை திறந்து அழுவுதா பாருடி... எல்லாம் அப்படியே குதிர் கணக்கா உட்கார்ந்து இருக்காளுங்க...” என்று வம்பளந்து கொண்டிருந்தார்கள்... எதற்கோ பின் பக்கம் வந்த என்னை பார்த்த அவர்கள், “ ஏண்டி சித்தப்பான்னு வாய் வரலையே ஒனக்கு?”
 துக்கத்தை அழுகையாய் வெளிப்படுத்தினால் மட்டும்தான் உலகம் நம்பும் போலும்.
ஆயிற்று சித்தப்பாவை வழியனுப்ப குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள், யாரோ தேவாரம் பாடிகொண்டிருந்தார்கள்.
“ தேவாரம் பாடும் போது யாரும் அழக்கூடாது..” சித்தப்பா சொல்வது போல் இருந்தது..
“ நல்ல மனுஷன்யா... எல்லாருக்கும் முன்ன நிப்பார்..” யார் யாரோ சித்தப்பாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருக்கும் போது யாரும் பெருமை பேசுவதில்லை...சித்தப்பா இந்த முறை அமைதியா போய்க்கிட்டிருந்தார்..
ஆயிற்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பமாய் சித்தப்பாவிற்கு படையலாம்...

நேத்து சென்னையில் இருக்கிற அக்கா புளிசாதம், எலுமிச்சை மாங்கா சாதம்னும்... முறுக்கு , எல்லடை பழம் என்று வகை வகையாய் பரப்பி வைத்திருந்தார்கள்...  சித்தப்பா புகைப்படத்தில் அமைதியாய் பார்த்து கொண்டிருந்தார்..

“ சுஜி எல்லா வீட்டு பங்காளிகளும் படைச்சாயிடுச்சுடி இனி நம்ம வீடுதான் பாக்கி... இன்னிக்கு காலையில் பெரியம்மா ஒத்தாசைக்கு வர்றேன்னிருக்காங்க... கொஞ்சம் வடைக்கு உளுந்தும், கடலையும் ஊற போட்டுடறேன்...” உள்ளூரில் இருக்கும் அக்கா சொன்னாள்.

மறுபடியும் இலை நிறைய பண்டங்கள்... சித்தப்பா அமைதியாய் புகைப்படத்தில்... ஊதுவத்தி புகை...  “ பரவாயில்லை தேனு சித்தப்பாவுக்காக காலையிலையே இத்தனையும் செஞ்சிருக்கா...”   நாலாவது வீட்டு பாலாம்மா அக்காவை பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க..

“ சித்தப்பா நம்ம எல்லாருக்கும் எவ்வளவு செஞ்சிருக்காரு?” அக்கா மூக்கை உறிஞ்சினாள்.. ஊது வத்தி புகைந்தது... எனக்குள்ளும் எதோ... அக்கா இதே ஊர்ல இருக்கா... சித்தப்பான்னு இத்தனை நாளா எதாவது இப்படி வீட்ல சுட்டா கொடுத்திருப்பாளா?  ஊருக்கு போகும்போது சித்தப்பாவுக்கு எதாவது பிஸ்கெட் வாங்கிட்டு போனா அம்மா சொல்வா,” ஏண்டி உன் அக்காவை பாரு பக்கத்திலயே இருந்தாலும் எங்களுக்கே எதுவும் தர்றதில்ல... நீ ஊருக்குன்னு வந்தியனா நோட்டை இழுத்துட்டு போயிடற.. பிழைக்க தெரியாதவ...”
       
எல்லாம் வேடிக்கையாக இருந்தது...
ஒன்பது நாளும் அமர்க்களப்பட்ட சித்தப்பா வீடு இன்று காரியம் முடிந்து அவரவர் கிளம்பிவிட்டார்கள்.. சித்தியின் தனிமை என்னவோ செய்தது... பி.பி சுகர் என்று ஏற்கனவே ஓடிந்து போயிருக்கும் சித்தியை இனி யார் கவனிப்பார்கள்...

மறு முறை ஊருக்கு சென்றிருந்தேன்... இந்த முறை சித்திக்கு தேவையான பழம், பல்லுக்கு இதமான பிஸ்கெட் என்று வாங்கி வைத்திருந்தேன்... கையிலிருந்த பையை பார்த்து தேனு, “ ஏண்டி அவங்க மருமகளுகளே ஒண்ணும் கவனிக்கிறதில்ல... நீ எதுக்குடி இதெல்லாம் செலவு பண்ணிக்கிட்டு வாங்கிட்டு போய் கொடுக்கிற?”

“ க்கா... செத்தப்பறம் போட்டோவுக்கு படைக்கிறதை விட இருக்குறப்ப கொடுக்கிறது எனக்கு புடிச்சிருக்குக்கா... மிஞ்சி போனா நூறு ரூபாய் ஆகுமா... அன்புக்கு விலை போடமுடியுமாக்கா ?”

சித்தி பையை வாங்கி கொண்டு பாசத்தோடு பார்த்தாள்.. திரும்பும் போது பக்கத்திலிருந்த அண்ணி, பெரியம்மா... அத்தை அக்கா என.. எல்லோரும் சித்தியின் போட்டோவிற்கு படைக்க இருக்கும் அன்ன பூரணியாய் தெரிந்தார்கள்.


Tuesday, 25 February 2014

நினைவெல்லாம் நீயே ஆனாய்...............











“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....”

“ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?”

“ இல்லப்பா... எனக்கு எழுதல்லாம் வராது.... என் எண்ணத்துக்கு  நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...”
கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று  எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?”

“ ஏன் இப்படி கேட்கிற ... அப்பா போய் பத்து வருஷம் ஆயிடுச்சி... அப்பாவோட நினைவு அப்படியேதான் இருக்கு....”

அண்ணியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அப்பாவையும், அம்மாவையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போய்விட்ட அண்ணன் சுதர்ஸனை நினைத்து பார்த்து சிரித்து கொண்ட இனியா, “ சரி.. சொல்லு சூர்யா...

“ எங்கம்மாவுக்கு கல்யாணமாகி எட்டு வருஷத்துக்கு குழந்தையே பிறக்கலையாம் இனியா... வேண்டாத தெய்வமில்லை.. சுத்தாத கோவிலுமில்லையாம்... அதுக்கப்பறம் அம்மா என்னை சுமந்திருக்காங்க... எங்கப்பாவுக்கு தலை கால் தெரியலை... அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போதே என் கிட்ட பேச ஆரம்பிச்சாட்டாராம்... அப்ப எங்க நிலத்துல நல்ல விளைச்சல் ... அறுவடை முடிஞ்சு  நெல்லெல்லாம் களத்து மேட்டுல குவிச்சிட்டிருக்காங்களாம்... நான் பொறந்துட்டேன்ற சேதி அப்பா காதுக்கு எட்டியதும்.. ‘ டேய்... யார் யார் எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்கிட்டு போங்கடா புள்ள பொறந்திருக்கான்..னு...’ அப்படியே போட்டு விட்டு சந்தோஷமா ஓடிவந்தாராம்... அதுக்கப்புறம் ரெண்டு தம்பிங்கன்னு எங்க குடும்பம் அழகா வளர்ந்துச்சி...

அவர் கூட சின்ன வயசுல விளையாடுனது எல்லாம் ஞாபகம் இருக்கு இனியா.. தேங்காய் பிஞ்சை வச்சி குச்சி சொருகி அழகா தேர் செஞ்சி கொடுத்து கயிறு கட்டி இழுத்தது இன்னும் மனசுல பசுமையா இருக்கு....

திருவிழா அப்ப சாமி தெரியலைன்னு அழுத என்னை இடுப்பில் உட்கார்த்தி வச்சி ரெண்டு தம்பிகளையும் தோள் மேல் தூக்கி “ இப்ப தெரியுதாடா..?ன்னு வாஞ்சை தீர கேட்பார்... கைவலிக்குதுன்னு இறக்கி விட்டதே இல்லை...அம்மாதான் சொல்வா, “ பாவம்டா ராஜா.. அப்பாக்கு கைவலிக்கும் இறங்குகடான்னு...” இப்ப என் அப்பா தோள் மேல் சாஞ்சி அழனும் போல் இருக்கு இனியா...என் வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் என் அப்பா... அவர் என்னிக்குமே கடுமையா பேசி நான் பார்க்கலைப்பா... அப்பா படிக்காததால் என்னை நல்லா படிக்கனும்னு சொல்வார்..” சூரி...  நல்லா படிப்பா... படிச்சி பெரிய உத்தியோகத்துக்கு போகனும்... அந்த நாளை நான் பார்த்துட்டா வேற எதுவும் எனக்கு தேவையேயில்லைய்யா...”  அருகில் இழுத்து சட்டை காலரை நிமிர்த்தி சிரிப்பார்...

எங்க நெலத்துல வேலை செஞ்சவங்களை கூட கூலிக்காரங்களா எங்கப்பா பார்த்ததே இல்லை... அங்கயே முப்பது பேருக்கானாலும் சாப்பாடு தயாராவும்... அவங்க கூடவே அப்பா சந்தோஷமா சாப்புடுவார்... எந்த பருவத்துல விதைக்கனும்.. எப்ப அறுவடை செய்யனும் எல்லாம் அத்துபடி...

ஸ்கூல் முடிஞ்சா என் அப்பாவை தேடிக்கிட்டு நெலத்துப்பக்கம் ஓடுவேன்... தூரத்துல பார்க்கும் போது அப்பா முதுகு தெரியும்... யார் கூடயோ பேசிட்டிருக்க மாதிரி குரல் கேட்கும்.... கிட்டத்துல போய் பார்த்தா அப்பா தனியாத்தான் இருப்பார்...

“ ஏன்ப்பா பேசின மாதிரி கேட்டுச்சு யார் கூட பேசிட்டிருந்திங்க? ம்பேன்...
“ இல்ல சூரி இவங்களோடத்தான் பேசிக்கிட்டிருந்தேன்....’ இப்படியும் அப்படியும் தலையாட்டிக்கிட்டிருக்கும் நெல்லுக்கதிருங்களை காமிப்பார்..

“ ஐய்... என்னப்பா இது இந்த செடிக்கு காது கேட்குமா? இதோடயா பேசிக்கிட்டிருந்தீங்க?

“ ஆமாண்டா கண்ணா... இதுவும் நம்மை மாதிரி ஒரு உசிருதான..? நாம பேசறதை எல்லாம் கேட்கும்...பாத்தியா வறண்டு போவாம தண்ணி பாய்ச்சினவுடனே அழகா சிரிச்சி நிக்கிறத...

அதெல்லாம் ஒரு காலம் இனியா... பொய்க்காம மழை பெய்ஞ்சதும்... விளைஞ்சதும்.. யாரும் இல்லன்னு கேட்க கூடாது... கையில எதா இருந்தாலும் தூக்கி கொடுத்துருவார்... வாரி வாரி கொடுத்திட்டிருந்த கைக்கு சோதனையா ஒரு காலம் வந்துச்சி....

ஊருக்குள்ள நெலம் வச்சிருந்தவனை எல்லாம் தோல் கம்பெனிக்காரன் மடக்கி போட்டுட்டான்... அத்தனை பேரும் நெலத்தை கொடுத்துட்டு அங்கிட்டு வேலைக்கு சேர்ந்துட்டாங்க.... அப்பா மட்டும் மண்ணை கொல்ல மாட்டேன்னு புடிவாதமா நெலத்தை வச்சிக்கிட்டார்....

அப்பறம் நெலத்து வேலைக்கு ஒரு பயலும் வரலை....... மண்ணை கொன்னதாலவோ என்னவோ மழைக்கூட பொய்ச்சு போச்சு... கெணத்துல சுத்தமா தண்ணி வத்தி போச்சு... தெனம் முப்பது பேருக்கு சாப்பாடு போட்ட எங்க அப்பா எங்க மூணுபேத்துக்கும்... ஒரு வேளை சாப்பாடு போடவே கஷ்டப்பட்ட அந்த கொடுமைய நினைச்சா.. இன்னிக்கும் அழுகையா வருது....இனியா..

படி படியா அளந்த குடும்பம் கிலோவுல வாங்க கூச்சப்பட்டு யார் யார்கிட்டயோ பை குடுத்து அரிசியை கடையில் வாங்கிட்டு வரசொல்வார்... எவ்வளவு பிரச்சினையிலும் அப்பா மனம் ஒடைஞ்சதே இல்லை... அப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தோம்...

‘ சூரி நீ ஆளாயிட்டா மத்த ரெண்டு பேரையும் நீ பாத்துக்குவே... எதையும் மனசுல வச்சிக்காம படி..ப்பா..’ ம்பார்.

 நான் நல்ல வேலைக்கு போவனும் அப்பாவை பெருமைப்படுத்தனும்னு ரொம்ப கனவு கண்டேன் இனியா... அதெல்லாம் சுக்கு நூறா போயிடுச்சி... அப்ப ப்ளஸ் டூ படிக்கிறேன்...  ப்ரெண்ட்ஸ்களோட சினிமா போறேன்பான்னேன்...’ அப்பா டக்குன்னு பாக்கெட்டிலிருந்த நோட்டை எடுத்து கொடுத்து... வரும்போது அப்படியே ஹோட்டல்லயும் எதாச்சும் சாப்பிடுங்கன்னு... சிரிச்சார்...

அந்த சிரிப்பைத்தான் நான் கடேசியாக பாப்பேன்னு  நெனைச்சுக்கூட பார்க்கலை....
சூர்யா கண்கள் கலங்க... மௌனமாகிவிட, “ ஹேய்... ரிலாக்ஸ் பா... போதும்...  நாளைக்கு பேசிக்கலாமா?” கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் .

வாங்கி கொஞ்சம் விழுங்கியவன்...” இல்ல இனியா.. நான் மொத்தத்தையும் கொட்டிடனும்....
சினிமா முடிஞ்சு வீட்டுக்குள்ளார நுழையறப்பதான் எங்க பாட்டி ஓன்னு கத்திக்கிட்டே என்னை புடிச்சிக்கிச்சி...’ சூரி... அப்பா நெஞ்சு வலிக்குதுன்னு விழுந்துட்டார்டா.. சித்தப்பா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கடா என்னைய கூட்டிட்டு போடா...

இரண்டு  நாளைக்கப்பறம்தான் அப்பா கண்ணு தொறந்து பார்த்தார்.... பேசமுடியலை.. மூச்சுதிணறல் ரொம்ப இருக்கு... பொழைக்கறது கஷ்டம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்ங்கிறாங்க... அப்படியே  நெல குலைஞ்சி போயிட்டோம்... அப்பா எங்கிட்ட எதோ சொல்ல வர்றாரு... ஆனா முடியலை.. அவரை டாக்ஸியில படுக்க வச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வர்ரோம்... வழியில எங்க நெலத்துக்கிட்ட வரும்போது... என் சட்டையை புடிச்சி நிறுத்துங்கிறாரு.... டாக்ஸியை நிறுத்தினா...  நெலத்துல வாடி வதங்கியிருக்க பயிரை கண்ணுல கண்ணீர் வழிய பார்க்கிறார்... உயிரா நினைச்ச பயிரும்... பயிறுக்கு உயிரா இருந்த எங்கப்பாவும் ஒரு சமயத்துல போயிட்டாங்க... இனியா....”

        அப்பா இல்லைங்கிறத ஏத்துக்க முடியாமயே வருஷம் ஒடிப்போயிடுச்சி... நானும் படிச்சி வேலைக்கு வந்துட்டேன்... என் தம்பிகளையும் படிக்க வச்சி..கல்யாணம் குடும்பம்னு ஒரு நிலையாயிட்டோம்.... இத பார்க்க அப்பா இல்லை... இந்த ஜென்மத்துல அவர் பிரிவை என்னால தடுக்க முடியலை... அடுத்த ஜென்மத்துலயாவது எங்கப்பா என்னோட வெற்றியை பாத்து சிரிக்கனும் இனியா.... எங்கப்பாவுக்கு மகனா அடுத்த ஜென்மத்துலயும் பொறக்கனும்.... அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருக்கா இனியா....?”

இனியாவின் கைகளை கோர்த்து தன் முகத்தில் பொத்திக்கொண்டு அழுதவனை என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியவில்லை.....

“ சூரி... இத என்னால கதையா எழுதி மறந்துட முடியுதுடா... வாழ்ற வரை கூடவே வரும் ஞாபகங்கள்ப்பா... உன்னை என் நண்பனா நெனைக்கறதுக்கு பெருமையா இருக்குடா... உங்கப்பா உங்கூடவேத்தான் இருக்கார்.... யாழினி யாரு உங்கப்பாதாண்டா... உனக்கு குழந்தையா பொறந்திருக்கார்...சொல்லு அவகிட்ட சொல்லு தாத்தான்னு சொல்லி சொல்லி வளர்த்து விடு... இங்க பாரு யாழினி சிரிக்கிறா....”

        யாழினியை தோள் மீது தூக்கிகொண்டவன்... கை அசைத்துவிட்டு போய்கொண்டிருந்தான்.... அவன் அப்பாவை சுமந்து செல்வது போல இருந்தது... தூரத்தில் ஒரு புள்ளியாய்.... மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாள்...கற்பனைகளோடு தோற்றுப்போய் வாழ்வியல் சொன்ன அவனை.....!

( இப்படைப்பு என் நண்பர் ‘ சூர்யா’ அவர்களுக்கு....)
       



Friday, 14 February 2014

இப்படி எல்லாம் காதலர் தினம் கொண்டாடறங்க..............



வீட்டில்...........

உஷா : என்னங்க காய் கறி பையில் ரெண்டு ரோஸ் .....?

அன்பு: ஆமா.. நாளைக்கு பிப்ரவரி 14.... ஒரு ரோஸ் பத்து ரூபான்னு சொல்வான்... அதான் இன்னிக்கே அஞ்சு ரூபான்னு வாங்கிட்டு வந்துட்டேன்...  ப்ரிட்ஜ்ல வச்சிடு நாளைக்கு குடுத்து ஐ லவ் யூ சொல்றேன்...

உஷா: அட கஞ்ச பிசினாறி.... அது சரி ரெண்டு எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?

அன்பு: ஒண்ணு உனக்கு இன்னொன்ன யாருக்காவது குடுக்க முடியுமான்னு பார்க்கிறேன்.....

உஷா:  நடக்கறதுக்கு காலும் குடுக்கறதுக்கு கையும் இருக்காதுலே.......
---------------

 ஊரில்...........

தீனிப்பண்டாரமான அந்த பெண்ணின் பின்னாடி ஒரு மாசமா அலைஞ்ச ஒருத்தன் காதலர் தினத்திலயாவது சொல்லிடலாமான்னு அவகிட்ட ரோஸை கொடுக்கிறான்.....

தீனிப்பண்டாரம்: ஆமாண்டா காதலை சொல்ல  எல்லாரும் ரோஸ் ப்ளவரைத்தான் குடுக்கனுமா? ஒரு காலிப்ளவரையாவது தரலாமில்ல... பக்கோடா போட்டு திங்கவாவது யூஸ் ஆகும்..?!