Thursday 19 April 2012

சிறகடிக்கும் சிட்டுகள்
சில்லறை சிதறடிக்கும் .. சிரிப்புகளாய
சின்ன சிட்டுகளின்
கும்மாளத்தை கண்டு -
பழைய நினைவு பந்தலடியில்
என் மழலை நாட்களை
பாய் விரிப்பேனா ..?
இல்லை ...
புதிதாய் பூத்து குலுங்கும்
தோட்டத்தின் ரசிகையாய் மாறி
கவிதை வடிப்பேனா ..?
இல்லாத அடுப்பை ஏற்றி
சமைத்ததாய் சொல்லி ..
சொப்புகளை சுற்றி..
அவர்கள் பொய்யாய் உண்ணும்
கூட்டாஞ்சோறு
என் கண்களுக்கு மெய்யான விருந்து ..!
பாயை சுருட்டி..
மூலையில் ஒளிந்து ..
கண்ணாமூச்சி ஆட்டமாம்..!
மேகத்தில் ஒளியும் நட்சத்திரங்களா..?
பூச்சி
சொல்லி தலையை நீட்டும் போது..
அழகு நிலா ..!
ரைட்டா .. தப்பா...
பாண்டி ஆட்டத்தில்
வந்தா சின்ன சண்டைக்கு
நான்..
மனுநீதி சோழனாய் மாறி
தீர்ப்பு   சொல்லணுமாம் ..!
கையை பிடித்திழுக்கும்
கன்றுகளுக்கு...
என்ன சட்டத்தை
சொல்ல  ..?
சமர்த்தாய் ஆட சொல்லி
காற்றுக்கு வேலி போடாமல் ..
கட்டியணைத்து மகிழ்கிறேன் ..
மழலையோடு மழலையாய் ..!
( குழந்தைகள் விளையாட்டு பற்றி 25 -12 -10 தின மலர் பெண்கள் மலரில் எழுதியது )