Thursday 17 May 2012

சிறுகதை

பொல்லாதவள்


லட்சுமியம்மாள் தன் வீட்டை சுற்றி நாலு போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாள். கீழ் போர்ஷனில் இருக்கும் அகிலாவுடன் தான் எந்நேரமும் கதை பேசிக்கொண்டிருப்பாள்.
அகிலா வாசலுக்கு நேராக தையல் மிஷினை போட்டுக்கொண்டு போகிற
வருகிறவர்களை புறணி பேசி கொண்டு பொழுதை போக்குவாள். ஆனால்
பேச்சு மட்டும் தேனாய் எல்லாரையும் அம்மா, அண்ணி என்று அழைத்து
கொண்டிருப்பாள்.
" ஏம்மா டல்லா இருக்கிங்க... சாப்பிடலையா..? விஷயத்தை வரவைப்பதற்காக தங்கமாய் பேசினாள் அகிலா.
" ஆனாலும் கீதாவுக்கு ரொம்பதான் திமிரு. கத்தரிக்காய் குழம்பு வைக்க
சொன்னா, வேணும்னே வெண்டைக்காய் குழம்பு வைச்சிருக்கா.. " மருமகளை வழக்கம் போல் குறை சொன்னாள் லட்சுமியம்மாள்.
" ஆமாம்மா அது கொழுப்பு அதிகம்தான்... சம்பாதிக்கிற திமிரு.. உங்க பிள்ளை அடக்கி வைச்சா தானை அடங்கும்.
" லட்சுமி அங்க என்ன பண்றே..?' கணவனின் குரல் கேட்டு தன் வீட்டிற்கு வந்தாள் லட்சுமியம்மாள்,
" மனசுக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டு வரலாம்னா பொறுக்காதே
உங்களுக்கு.. உங்க மருமக என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா..
இன்னிக்கு நான் சமைச்சதுக்கு மாறா சமைச்சு வெச்சிட்டு போயிருக்கா...."

"வெண்டைக்காய் முத்தி போயிடும்னு அதை போட்டு குழம்பு வைச்சிருப்பா.. உனக்கு அவளை குறை சொல்லலைன்னா பொழுதே போகாதே...? நம்ம மருமக வேலைக்கு போனாலும் பொறுமையா இருக்கா. நீ சண்டை போடும் போது பதில் சொன்னா மரியாதையா இருக்காதுன்னு பேசாம அமைதியா போறா.. அது உனக்கு மதிக்காத மாதிரி தெரியுது.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கீதா மொத்த துணியையும் மிஷினில்
போட்டு எடுத்தவள் மாடியில் காய வைக்க பக்கெட்டை எடுத்து சென்றாள். அங்கு தன் துணியை காய போட வந்த அகிலா, " என்ன கீதா எப்படி இருக்க.. ஒரு நாள்தான் உனக்கு லீவு.. அன்னிக்கு கூட உன்னால ரெஸ்ட் எடுக்க முடியலை. எல்லா வேலையும் நீயே செய்ய வேண்டியிருக்கு.. உங்க மாமியார் சரியான ராட்சசி.. எப்படிதான் நீ அவங்ககிட்ட இருக்கியோ..? மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் அகிலா.
" இங்க பாரு அகிலா .. என் மாமியாரை பத்தி பேச நீ யாரு..? நீ இந்த
வீட்டில குடியிருக்க.. அந்த எல்லையோடு இருந்துக்க.. என் மாமியார்தான்
கஷ்டபட்டு உழைச்சு முன்னுக்கு கொண்டு வேணும்னாலும் பேசிட்டு போகட்டும் நீ உன் வேலையை பாரு ..." என்று
தன் குடும்பம் என்று மாமியாரை விட்டு தராமல் ' நறுக்' என்று தெறித்த
கீதாவின் வார்த்தைகள். நைசாக மாடிப்படியில் ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த லட்சுமியம்மாளுக்கு ' சுருக் ' கென்று தைத்தது.

(22-1-2011 தினமலர்- பெண்கள் மலரில்)