Friday 31 August 2012

சிறுகதை
     


 பள்ளிக்கூடம்

                                                                                                
“ மேகா.. எழந்திரு டியர்.. இன்னியிலர்ந்துதான் நீ க்ளாஸ் ஜாய்ன் பண்ணப்போற.. தூங்கிட்டே இருந்தா எப்படி?
சந்துரு நான் போய்த்தான் ஆகனுமா? சிணுங்கினாள்.
“எவ்வளவோ படிச்சிட்ட..  இது பத்து நாள் கோர்ஸ்தானே.. உனக்காகவும் நம்ம எதிர்காலத்துக்குகாகவும்தான்மா…
“ க்கும்.. சலித்து கொண்டே ரெடியாகி கிளம்பும் போது அம்மாவின் போன், “ மேகி ம்மா.. நேத்து மாப்பிள்ளை விஷயத்தை சொன்னார்..  நானும் அப்பாவும் சிரிச்சுண்டோம்.. தானா தெரிஞ்சிக்க வேண்டியதை க்ளாஸ் போய் கத்துக்க போறத நினைச்சி. எனி வே ஆல் தி பெஸ்ட்,,! “
மேகா இருபத்திரெண்டு வயது அழகுப் பதுமை. எம்.சி.ஏ முடித்து பிரபல ஸாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அம்மா வீட்டிலிருந்த போது வீட்டு வேலைகளில் எதையும் தொட்டு கூட பார்க்க மாட்டாள். மஞ்சள் தூளுக்கும், மிளகாய் தூளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது.
 அம்மா தலைப்பாடாய் அடித்து கொள்வாள்,  “  எனக்கு செய்யலைன்னா பரவாயில்லை.. நாளைக்கு உனக்கு வர்ற புருஷன், குழந்தைகளுக்காவது சமைச்சி போட தெரியனுமில்ல..”
“ போம்மா..  உப்பு, புளின்னு அடுப்பங்கரையிலேயே அடைஞ்சி கிடக்க நான் என்ன பத்தாங்க்ளாஸா? கை நிறைய சம்பாதிக்கிறேன்… வேலைக்காரி வெச்சுப்பேன். “

“ ஆமாமா.. வேலைக்காரி  இருபத்தி  நாலு மணி  நேரமும் கூடவே இருப்பா வா…”  வீட்டு வேலைக்குதான்  ஆள் வருவா…  நம்ம வீட்டு கிச்சனை   நாமதானே பார்க்கனும்”
மாப்பிள்ளை சந்துருவும் ஸாப்ட்வேர் எஞ்சினியர், பெண் பார்க்க வந்த போதே சொல்லிவிட்டாள் அவளுக்கு சமைக்க தெரியாது என்பதை. ஹோட்டலில் சாப்பிட்டே பழகிவிட்ட அவன்  அது பற்றி கவலை படவில்லை. கவலை இப்போது மேகாவிற்குதான். வாய்க்கு ருசியாய்.. சத்தாய் அம்மாவின் வீட்டு சாப்பாடே சாப்பிட்டு பழகியவளுக்கு இப்போது திருமணமாகி  தனியாக போய் இரண்டு மாதமாய் கேண்டினில் சாப்பிட்டது வயிறு பிரச்சினை. டாக்டர் இனி வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு விடவும்  சமைக்க  கற்றுக் கொள்ள ‘ கேட்டரிங்’ க்ளாஸ்  போகிறாள்.